களமிறக்கப்பட்ட தனி டீம்.. கண்காணிப்பில் நிர்வாகிகள்! கர்நாடக தேர்தலுக்கு பக்காவாக இறங்கும் காங்கிரஸ்
பெங்களூர்: கர்நாடகாவில் சட்டசபைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், அம்மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் இப்போது பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. அங்கு அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இதில் எப்படியாவது வென்றே தீர வேண்டும் எனக் காங்கிரஸ் களமிறங்குகிறது. இதற்கான பணிகளையும் இப்போதே தொடங்கிவிட்டன.
ரைட்டு.. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல்.. மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவந்த கர்நாடக பாஜக அரசு!
கர்நாடக காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சி இன்னும் கூட வலிமையாக இருக்கும் மாநிலங்களில் ஒன்று கர்நாடகா. கடந்த முறை நடந்த தேர்தலில் கூட பாஜக பெரும்பான்மை பெறத் தவறியது. தற்போது பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசில் ஊழல் தலைவிரித்து ஆடுவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளதாகவும் இதனால் இந்த முறை எளிதாக தங்களால் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைப் பெற முடியும் என நம்புகிறது கர்நாடக காங்கிரஸ்.
டி.கே.சிவகுமார்
இதற்கான நடவடிக்கைகளையும் காங்கிரஸ் தீவிரமாக எடுத்து வருகிறது. இந்நிலையில், கர்நாடகா காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் பேசிய அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவகுமார், "பேரம் பேசி எல்லாம் சீட் வாங்க முடியாது. தேர்தலுக்காக அரசியல் ஆலோசகர் சுனில் தலைமையில் தனி டீமை தலைமை அமைத்து உள்ளது. இதை ராகுல் காந்தியே எங்களிடம் தெரிவித்தார். மொத்தம் 600 பேர் மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அனுப்பப்பட்டு உள்ளனர்.
கண்காணிப்பு
இவர்கள் யாருக்கும் ஆதரவானவர்கள் இல்லை. அனைத்து நிர்வாகிகளும் கண்காணிப்பில் உள்ளனர். ஒவ்வொரு தொகுதியும் இந்த டீம் கண்காணித்து வருகிறது. சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு கூட இடம் கண்டிப்பாகக் கிடைக்கும் என உறுதியாகச் சொல்ல முடியாது. சிறப்பாகச் செயல்பட்டால் மட்டுமே சீட் கிடைக்கும். கேரளாவைப் பாருங்கள். அங்குக் கூட சுமார் 13 சிட்டிங் எம்எல்ஏக்கள் நீக்கப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி கேரளாவை முடித்துக் கொண்டு அடுத்து கர்நாடகாவுக்குத் தான் வருகிறார். இதற்காக ஒவ்வொரு எம்எல்ஏவும் 5 ஆயிரம் பேரைத் திரட்டி வர வேண்டும். தேஷ்பாண்டே உள்ளிட்ட சிலர் தங்கள் தொகுதி வெகு தொலைவில் உள்ளதால் மக்களைத் திரட்ட முடியாது என்று கூறுகிறார். அதற்கெல்லாம் ஒன்றும் பண்ண முடியாது. ராகுல் காந்திக்காக இதைக் கூட உங்களால் செய்ய முடியாதா?
தொகுதியில் இருங்கள்
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் தான் இருக்கிறது. நிர்வாகிகள் அனைவரும் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும். அப்போது தான் வெல்ல முடியும். ஒவ்வொரு தொகுதியும் நமக்கு முக்கியம். சரியாக வேலை செய்ய முடியவில்லை என்றால் மூத்த நிர்வாகிகளாக இருந்தாலும் அவர்களுக்குப் பதவி மீண்டும் வழங்கப்படாது. இதைப் புரிந்து வைத்துக் கொண்டு செயல்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.
பாத யாத்திரை
பாஜகவுக்கு எதிராக மக்களைத் திரட்டும் வகையில் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை செல்கிறார். இப்போது கேரளாவில் பாத யாத்திரை செல்லும் அவர், செப்டம்பர் 30இல் கர்நாடகா செல்கிறார். அங்கு சுமார் 21 நாட்களுக்கு ராகுல் காந்தி நடைப்பயணம் செல்ல உள்ளார். ஒவ்வொரு நாளும் சுமார் 25 கி.மீ. நடக்கும் வகையில் இந்த யாத்திரை திட்டமிடப்பட்டு உள்ளது. கர்நாடக அரசியலில் இந்த பாத யாத்திரை முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.