"குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.2,000" கர்நாடகாவில் காங்கிரஸ் வாக்குறுதி.. பிரியங்கா காந்தி அறிவிப்பு!
பெங்களூரு: கர்நாடகாவில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இதனையொட்டி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் உள்ள 1.5 கோடி பெண்கள் பயனடைவார்கள் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது மக்கள் நீதி மய்யம் சார்பாக வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுக தரப்பில், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குடும்பத் தலைவிகளுக்கான மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி தமிழ்நாடு கடந்து புதுச்சேரி, குஜராத், ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் சென்றது. குறிப்பாக தமிழ்நாட்டில் திமுகவின் வாக்குறுதிகளான இலவச மின்சாரம், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உள்ளிட்ட வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
ஒரே நாடு ஒரே தேர்தல்.. அடம்பிடிக்கும் பாஜக! முதல் ஆளாய் ஆதரவு கொடுத்த ’அண்ணா’ திமுக! சாத்தியமா?
கர்நாடகா தேர்தல்
இதனிடையே கர்நாடகாவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. இதில் காங்கிரஸ், பாஜக மற்றும் ஜேடிஎஸ் உள்ளிட்ட கட்சிகளிடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. மூன்று கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாகியுள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜகவின் தேசியத் தலைவர்கள் கர்நாடகாவுக்கு பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகின்றனர்.
இலவச மின்சாரம்
அதேபோல் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், அனைத்து வீடுகளுக்கு மாதந்தோறும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தது. இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பெங்களூருவில் மகளிர் மாநாட்டில் பங்கேற்றுள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சியின் முக்கிய வாக்குறுதியை பிரியங்கா காந்தி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2 ஆயிரம்
அதற்கேற்ப, மாநாட்டில் பிரியங்கா காந்தி பேசுகையில், காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். இந்த பணம் பெண்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். விலை உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து பெண்கள் மீண்டு வர இந்த பணம் உதவியாக இருக்கும்.
1.5 கோடி பெண்கள் பயன்
கிருஹ லட்சுமி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் 1.5 கோடி பெண்கள் பயனடைவார்கள். இதுமட்டுமல்லாமல், மகளிருக்கென பிரத்யேக தேர்தல் வாக்குறுதி காங்கிரஸ் கட்சி சார்பாக வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதியை இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி முன்னெடுத்து வருகிறது. இந்த வாக்குறுதி பெண்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.