‛இது இந்துக்களின் நாடு.. பாகிஸ்தானுக்கு போங்க’.. முஸ்லிம் மாணவர்களை திட்டிய ஆசிரியை டிரான்ஸ்ஃபர்!
பெங்களூர்: கர்நாடகாவில் உருது பள்ளியில் பணியாற்றிய ஆசிரியை முஸ்லிம் மாணவர்களை பார்த்து ‛‛இது இந்துக்களின் நாடு. பாகிஸ்தானுக்கு போங்க" என ஆக்ரோஷமாக திட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவர் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள தனியார் பள்ளியில் முஸ்லிம் மாணவனை பிற மாணவர்களை வைத்து ஆசிரியை திருப்தா தியாகி அடிக்க கூறிய சம்பவம் வீடியோவாக வெளியானது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதற்கிடையே தான் திருப்தா தியாகி தான் மாற்றுத்திறனாளி என்பதால் பிற மாணவர்களை வைத்து அந்த மாணவனின் கன்னத்தில் அறைய கூறினேன். மதத்தின் அடிப்படையில் எதையும் செய்யவில்லை என்றார். இருப்பினும் இந்த சம்பவம் பெரிய அளவில் விவாதத்தை கிளப்பியது. ராகுல் காந்தி உள்பட பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இத்தகைய சூழலில் தான் கர்நாடகாவில் தற்போது இன்னொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதாவது கர்நாடகா உருது கல்வி நிறுவனங்களில் கீழ் சிவமொக்காவில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்கள் பாடம் நடத்தும் வேளையில் சண்டையிட்டுள்ளனர்.
இந்த வேளையில் பள்ளியில் கன்னட பாடம் நடத்தும் ஆசிரியை அவர்களை திட்டியுள்ளார். அப்போது அவர், ‛‛இது இந்துக்களின் நாடு. 2 பேரும் பாகிஸ்தான் செல்லுங்கள்'' என ஆக்ரோஷமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நடந்த சம்பவத்தை மாணவர்கள் தங்களின் பெற்றோரிடம் கூறியுள்னளர். இதையடுத்து அவர்கள் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகாரளித்தனர்.
இந்த புகாரை தொடர்ந்து கன்னட ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த 26 ஆண்டுகளாக ஆசிரியையாக இருக்கும் நிலையில் கடந்த 8 ஆண்டுக்களாக ஒரே பள்ளியில் பணியாற்றி வந்தார். தற்போது அவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
இதுபற்றி கல்வித்துறை அதிகாரி நாகராஜ் கூறுகையில், ‛‛சம்பந்தப்பட்ட ஆசிரியை பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். துறை ரீதியான விசாணை நடத்தப்பட உள்ளது. அதன்பிறகு கிடைக்கும் அறிக்கை அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது'' என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications