கன்னட மக்களின் உணர்வை புண்படுத்தியதற்காக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம... கூகுள் அறிவிப்பு
பெங்களூர்: இந்தியாவிலேயே மோசமான மொழி என்ன என்று ஆங்கிலத்தில் கூகுளில் தேடினால் கன்னட மொழியை கூகுள் காட்டியிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து கூகுள் நிறுவனம் கன்னட மொழி பேசும் மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. அத்துடன் சர்ச்சைக்குரிய பதிவையும் அகற்றி உள்ளது. இனி கன்னட மொழி குறித்து தவறான தகவல் கூகுளில் வராது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்காகள ஃபேஸ்புக் ட்விட்டர் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பேசு பொருளாக மாறியிருப்பது கன்னட மொழி குறித்து கூகுள் காட்டிய விடை. இந்தியாவிலேயே மோசமான மொழி என கன்னடமொழியை காட்டியதால் கன்னட மக்கள் கொதித்து போனார்கள்.
What is the ugliest language in India? என்ற கேள்விக்கு கன்னடம் என்று சஜஷன் காட்டியிருக்கிறது. யூடியூப் ஒன்றில் இடம் பெற்றுள்ள வரியை காட்டியிருக்கிறது. கூகுள் அல்காரிதம் செய்த வேலையால் கன்னட மக்கள் கடும் கோபம் அடைந்தனர்.
சுந்தர் பிச்சை
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு ட்விட்டரில் டேக் செய்து பல்லாயிரம் புகார்கள் தெரிவித்துள்ளனர். உடனே அந்த பதிவினை நீக்க வேண்டும் என்று வலியுறுததினர். அத்துடன் கன்னட மக்களிடம் கூகுள் நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மக்கள் கோபம்
இதனிடையே கூகுள் நிறுவனத்திற்கு சட்ட ரீதியான நோட்டீஸ் வழங்கப்படும் என்று கர்நாடகா அரசு எச்சரித்தது. கன்னட, கலாச்சாரம் மற்றும் வனத்துறை அமைச்சர் அரவிந்த் லிம்பாவலி செய்தியாளர்களிடம் கூறுகையில், அந்த கேள்விக்கு இதுபோன்ற பதிலைக் காட்டுவதற்காக கூகுள் நிறுவனத்திற்கு சட்ட ரீதியாக நோட்டீஸ் வழங்கப்படும் என்று எச்சரித்திருந்தார். மேலும் கூகுள் நிறுவனம் மீது கன்னட மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். அரசியல் தலைவர்களும் கூகுளை விமர்சித்து வருகிறார்கள்.
அந்த பதிவை நீக்கியது
இதையடுத்து கன்னடத்தை "இந்தியாவின் மோசமான மொழி" என்று வருதை நீக்கி உள்ளது கூகுள் நிறுவனம். கன்னடம் குறித்து சர்ச் முடிவு தங்கள் கருத்து அல்ல என்று தெரிவித்துள்ளது . இப்படியாக தேடுதலில் வந்ததற்காக கன்னட மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது கூகுள்.
உடனே சரிசெய்வோம்
இது தொடர்பாக கூகுள் வெளியிட்ட அறிக்கையில் "சில நேரங்களில், இணையத்தில் உள்ளடக்கம் விவரிக்கப்படுவது குறிப்பிட்ட கேள்விகளுக்கு விவகாரமான முடிவுகளைத் தரும். இது சிறந்ததல்ல என்று எங்களுக்குத் தெரியும், ஆனால் அதனால் ஏற்படும் சிக்கல்கள் பற்றி எங்களுக்குத் தெரியவந்ததும் உடனே சரி செய்துவிடுவோம். எங்கள் வழிமுறைகளை மேம்படுத்த தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். தேடுதலில் காட்டிய தகவல் எங்கள் கருத்து அல்ல. எனினும் மக்களின் உணர்வையும் புண்படுத்தியதற்காக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம்" என்று கூறியுள்ளது.