இன்று தொடங்கியது எஸ்எஸ்எல்சி தேர்வு.. ஹிஜாப் அணிந்து வந்தால் அனுமதியில்லை: கர்நாடக அரசு ஸ்ட்ரிக்ட்
ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வந்தால், சம்பந்தப்பட்ட மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது.
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகள் நடைபெறும் நிலையில் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதுவதற்கு அனுமதி கிடையாது என்று மாநில அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார். அரசின் இந்த உத்தரவு மாணவிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிவதற்கு கடந்த பிப்ரவரி மாதம் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வந்தனர். எனினும் அவர்கள் பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.
பின்னர், கர்நாடகாவின் பிற பகுதிகளில் உள்ள கல்வி நிலையங்களிலும் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனிடையே, ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ, மாணவியரில் சிலர் காவி துண்டு அணிந்து வரத் தொடங்கியதால் பதற்றம் அதிகரித்தது.

ஹிஜாப் அணியத் தடை
ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மாணவிகள் சிலர் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில் கடந்த 15ஆம்தேதி தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று உத்தரவிட்டனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று எஸ்எஸ்எல்சி தேர்வு தொடங்க உள்ளது.

சீருடை மட்டுமே அணிய வேண்டும்
இதையடுத்து மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதுவதற்கு அனுமதி கிடையாது என்று கர்நாடக அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார். எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளன. எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு எழுத வருபவர்களும் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும். ஹிஜாப் அணிந்து வந்து தேர்வு எழுத தடை விதித்து கர்நாடக மாநில பள்ளி கல்வித்துறை நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதை நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.

எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதத் தடை
ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வந்தால், சம்பந்தப்பட்ட மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஹிஜாப் விவகாரத்தில் எஸ்எஸ்எல்சி உள்ளிட்ட பொதுத் தேர்வை எழுதாமல் தேர்வை புறக்கணிப்போருக்கு மறுதேர்வும் நடத்தப்படாது சில பள்ளிகளில் ஹிஜாப் அணிந்து வருவது சீருடையாக எடுத்துக் கொள்ளப்பட்டு இருந்தாலும் தேர்வு நேரங்களில் ஹிஜாப் அணிய அனுமதி கிடையாது.

யாருக்கு தடை பொருந்தும்
தேர்வு எழுத வரும்போது ஹிஜாபை எடுத்து விட்டுத்தான் உள்ளே வரவேண்டும். இதற்கான அறிக்கையை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ளோம். இந்த உத்தரவு தனித்தேர்வர்களுக்கும், மதிப்பெண்ணை அதிகரிக்க மறுதேர்வு எழுதுபவர்களுக்கும் பொருந்தும்.

அமைச்சர் பி.சி நாகேஷ்
மாநிலத்தில் 84 ஆயிரம் முஸ்லிம் மாணவிகள் உள்ள நிலையில் 500 முதல் 600 முஸ்லிம் மாணவிகள் மட்டுமே இந்தப் பிரச் சினையை எழுப்பியுள்ளனர். பெரும்பாலான மாணவிகள் அரசு உத்தரவை மதிக்கின்றனர். ஒருசிலர் மட்டுமே எதிர்க்கின்றனர். நாம் நேர்மறையான சிந்தனை உள்ள பக்கத்தை பார்க்க வேண்டும் என்று அமைச்சர் பி.சி நாகேஷ் கூறியுள்ளார். அரசின் உத்தரவு ஹிஜாப் அணியும் மாணவிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications