தாய்மொழியை விட்டு இந்திக்கு ஆதரவு... பாஜகவினருக்கு வெட்கமில்லையா? நடிகர் பிரகாஷ் ராஜ் ஆக்ரோஷம்
பெங்களூர்: பெற்ற தாய், பிறந்த மண், வாழும் நிலத்துக்கும் துரோகம் செய்துவிட்டு கன்னட மொழிக்கு பதில் இந்திக்கு ஆதரவு தெரிவிப்பதில் வெட்கமில்லையா என கர்நாடக பாஜக தலைவர்களிடம் நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
கன்னட நடிகர் கிச்சா சுதீப்புக்கும், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுக்கும் இடையே தேசிய மொழி இந்தி என்பது தொடர்பாக டுவிட்டரில் கருத்து பரிமாற்றம் நடந்தது.
தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த தீபராஜன்.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்... ரூ.5 லட்சம் நிவாரணம்
அஜய் தேவ்கன் இந்தி மொழியில் தனது டுவிட்டரில், ‛‛சகோதரர் கிச்சா சுதீப், இந்தி நமது தேசிய மொழி இல்லையென்றால் நீங்கள் ஏன் உங்கள் தாய்மொழி படங்களை இங்கு டப் செய்து வெளியிடுகிறீர்கள்?. இந்தி முன்பும் இப்போதும் எப்போதும் நமது தாய்மொழியாக, தேசிய மொழியாக இருக்கும்'' என்றார்.
சுதீப் பதிலடி
இதற்கு கிச்சா சதீப், "என்னுடைய பேச்சின் பொருள் தவறாக உங்களுக்கு வந்து சேர்ந்திருக்கும் என நினைக்கிறேன் சார். நேரில் சந்திக்கும் போது ஏன் அப்படி சொன்னேன் என்பதை உங்களுக்கு விளக்குகிறேன். புண்படுத்த வேண்டும் என்றோ விவாதம் செய்ய வேண்டும் என்றோ நான் அப்படி சொல்லவில்லை" என்றார். மேலும், இன்னொரு பதிவில், "நீங்கள் இந்தியில் அனுப்பியது எனக்கு புரிந்தது. ஏனெனில் நாங்கள் நேசித்து இந்தியை கற்றுக்கொண்டிருக்கிறோம். ஆனால் என்னுடைய இந்த பதிலை ஒருவேளை நான் எனது தாய்மொழியான கன்னடத்தில் பதிவிட்டு இருந்தால் நிலைமை என்னவாக இருக்கும். அது உங்களால் எப்படி புரிந்து கொள்ள முடியும். நாங்களும் இந்தியாவில்தானே இருக்கிறோம் சார்?" என்று பதிலடி கொடுத்தார்.
கர்நாடகத்தில் எதிர்ப்பு
இது தற்போது இந்தியா முழுவதும் பேசும் பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கர்நாடக முன்னாள் முதல்வர்களான சித்தராமையா, குமாரசாமி ஆகியோரும் இந்தியை தேசிய மொழி எனக்கூறியதற்கு நடிகர் அஜய் தேவ்கனை கடுமையாக சாடியுள்ளனர். கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் திரையுலகத்தை சேர்ந்தவர்களும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
பாஜக தலைவர்கள் ஆதரவு
இந்நிலையில் கர்நாடக பாஜக தலைவர்கள் சிலர் இந்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். கர்நாடக அமைச்சர்களான முருகேஷ் நிராணி, அஸ்வத் நாராயண், முன்னாள் மத்திய அமைச்சர் ரமேஷ் ஜிகஜினகி, தமிழக பாஜக பொறுப்பாளர் சிடி ரவி ஆகியோர் இந்தி மொழிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். அதாவது இந்தி இந்தியாவின் இணைப்பு மொழி என அஸ்வத் நாராயணன் கூறினார். இந்தியை இந்தியாவின் இணைப்பு மொழியாக நாம் பயன்படுத்த வேண்டும் என சிடிரவியும், இந்தி மொழி விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு நான் ஆதரவு அளிக்கிறேன் என ரமேஷ் ஜினஜினகியும், இந்தியை தேசிய மொழியாக வைப்பதில் தவறு ஏதுமில்லை என அமைச்சர் முருகேஷ் நிராணியும் கூறியுள்ளனர். இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
Recommended Video
வெட்கமில்லையா?
இந்நிலையில் தான் நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில், ‛‛பெற்ற தாய், பிறந்த மண், வாழும் நிலத்துக்கும், கன்னடத்துக்கும் துரோகம் செய்ய வெட்கமாக இல்லையா'' என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பதிவில் அவர் படம் ஒன்றையும் பதிவேற்றியுள்ளார். அதில் அமைச்சர்கள் அஸ்வத் நாராயணன், முருகேஷ் நிராணி, சிடி ரவி, ரமேஷ் ஜினஜினகி ஆகியோர் கூறிய வாசகங்கள் கன்னட மொழியில் இடம்பெற்றுள்ளது. பிரகாஷ் ராஜின் இந்த பதிவுக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.