வாசல் வரை வந்து ‛ஆல் தி பெஸ்ட்’.. கர்நாடகா முதல்வராகும் சித்தராமையா! ராகுல் சொன்னது என்ன தெரியுமா?
பெங்களூர்: கர்நாடகா முதல்வர் பதவியை பெறுவதில் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில் இருவரும் இன்று ராகுல் காந்தியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் தான் சித்தராமையா-ராகுல் காந்தி சந்திப்பில் நடந்த முக்கிய விஷயம் குறித்த பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற நிலையில் முதல்வர் பதவிக்கான ரேஸில் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். சித்தராமையா 2013 முதல் 2018 வரை முதல்வராக இருந்ததோடு, எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டார். அதேபோல் டிகே சிவக்குமார் மாநில தலைவராக செயல்பட்டு வருகிறார்.

இந்த தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதில் இவர்கள் 2 பேரின் செயல்பாடு தான் மிகவும் முக்கியம் காரணமாகும். இதனால் தான் இருவரும் முதல்வர் பதவி மீது கண்வைத்து காய்நகர்த்தி வந்தனர். 2 பேரும் டெல்லியில் முகாமிட்டு நேற்று மல்லிகார்ஜூன கார்கேவையும், இன்று ராகுல் காந்தியையும் தனித்தனியாக சந்தித்து பேசினார்.
இதற்கிடையே தான் தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ராகுல் காந்தியை, சித்தராமையா சந்தித்தபோது என்ன நடந்தது என்பது பற்றிய தகவல் தான் அது. சோனியா காந்தியின் வீட்டில் ராகுல் காந்தியை சித்தராமையா சந்தித்தார். அப்போது அவர் டிகே சிவக்குமார் பற்றிய விஷயங்களை பேசாமல் தனக்கு ஏன் முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்பது பற்றி பேசியுள்ளார்.
மேலும் துவக்கம் முதலே சித்தராமையாவுக்கு ராகுல் காந்தி ஆதரவாக இருக்கிறார். இந்நிலையில் தான் சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி வழங்க அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தான் சித்தராமையா, அங்கிருந்து புறப்பட்டுள்ளார். அப்போது வாசல் வரை வந்த ராகுல் காந்தி, ‛‛ஆல் தி பெஸ்ட் சித்தராமையா ஜி'' என சிரித்த முகத்துடன் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன்மூலம் கர்நாடகாவின் அடுத்த முதல்வர் சித்தராமையா தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சற்று நேரத்தில் கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்பதை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்க உள்ளது. இதையடுத்து சித்தராமையா நாளை பதவி பிரமாணம் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.












Click it and Unblock the Notifications