கண்கள் சிவந்த சித்தராமையா.. "தமிழ்நாட்டை பாருங்க.. அவர்களால் எப்படி முடிகிறது!" அதிகாரிகளிடம் ஆவேசம்
பெங்களூர்: கர்நாடகாவில் முதலீடுகள் ஈர்ப்பது தொடர்பாகக் கடந்த சில காலமாகவே பல்வேறு விவாதங்கள் நடந்து வருகிறது. இது தொடர்பாக அங்கு சமீபத்தில் நடந்த கூட்டத்தில் தமிழ்நாடு உட்பட அண்டை மாநிலங்களை உதாரணமாகச் சொல்லி சித்தராமையா அதிகாரிகளிடம் கடிந்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் தான் கர்நாடகா- ஆந்திரா இடையே முதலீடுகள் தொடர்பாகச் சமூக வலைத்தளங்களில் விவாதம் எழுந்திருந்தது. அதேநேரம் கர்நாடகாவில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் சில தாமதங்கள் ஏற்படுவதாகவும் சொல்லப்பட்டது. இதற்கிடையே முதலீடு தொடர்பான ஒப்புதல்களைத் தாமதப்படுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா எச்சரித்துள்ளார்.

கர்நாடகா முதலீடு
கர்நாடகாவில் சமீபத்தில் முதலீடுகளை ஈர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பான கூட்டம் நடைபெற்றது. முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது தான் சித்தராமையா முதலீட்டு ஒப்புதல்களைத் தாமதப்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தினார். இது தொடர்பாக அனைத்துத் துறைகளுக்கும் தலைமைச் செயலாளர் மூலம் அறிவுறுத்தல்களை வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.
தமிழ்நாட்டை பாருங்க
பல்வேறு துறைகளில் தடையில்லா சான்றிதழ்கள் பெறுவதில் ஏற்படும் தாமதத்தைக் குறிப்பிட்ட சித்தராமையா, "மாநிலத்தில் முதலீடுகளில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க.. NOCகள் வழங்குவதற்கான காலக்கெடு குறைக்கப்பட வேண்டும்" என்றார். குறிப்பாக தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு போன்ற அண்டை மாநிலங்களில் குறைவான காலக்கெடு இருப்பதையும் சித்தராமையா குறிப்பிட்டார்.
சித்தராமையா டென்ஷன்
அண்டை மாநிலங்களில் தடையில்லா சான்றிதழ்களை வழங்க 7 முதல் அதிகபட்சம் 66 நாட்கள் மட்டுமே ஆகும் நிலையில், கர்நாடகாவில் மட்டும் 20 முதல் 120 நாட்கள் ஆகிறது என்று சித்தராமையா அதிருப்தி தெரிவித்தார். இதுபோன்ற பிரச்சனைகளைக் கண்டறிந்து சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவர் மேலும் கூறுகையில், "உச்ச நீதிமன்ற உத்தரவுகளை ஒரு காரணமாகக் கூறி அதிகாரிகள் எதுவும் செய்யாமல் சும்மா இருக்கக்கூடாது.
அண்டை மாநிலங்களுக்கும் கூட உச்ச நீதிமன்ற உத்தரவு பொருந்தும் தானே.. அப்போது அந்த மாநிலங்கள் மட்டும் எவ்வாறு செயல்படுகின்றன? தேவையற்ற தாமதங்களை ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு முதலீட்டாளருக்கு நேரம் கூட ஒரு முதலீடு தான்.. எனவே, என்ஓசி பெறுவதில் தாமதம் ஏற்பட்டால் முதலீடுகள் வராமல் போகலாம். இதனால் மாநிலத்திற்கு இழப்பு ஏற்படும்.
தாமதம் இருக்கக்கூடாது
குஜராத், தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் நமக்குக் கடும் போட்டி தருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, என்ஓசிக்களின் காலம் குறைக்கப்பட வேண்டும். இதற்குத் தனி முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.. மேலும் தாமதங்களுக்கு இடமளிக்கக்கூடாது" என்றார். மேலும், மாநிலத்தில் தொழில் துறைக்கு உகந்த சூழலை மேம்படுத்த ஏதுவாக சட்டங்கள் மற்றும் விதிகளில் தேவையான திருத்தங்களைக் கொண்டு வரவுள்ளதாகவும் சித்தராமையா உறுதியளித்தார்.
கர்நாடக ஐடி அமைச்சர்
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற கர்நாடக ஐடி துறை அமைச்சர் பிரியங்க் கார்கேவும் சில கருத்துகளைக் கூறினார். அவர் இது குறித்து "தமிழ்நாட்டில் 51 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (SEZ) உள்ளன, அவை மாநில பொருளாதாரத்தில் 8.9% பங்களிக்கின்றன. நம்மிடம் 37 சிறப்புப் பொருளாதார மண்டலம் மட்டுமே உள்ள நிலையில், அதுவே 8.2% வரை பங்களிக்கின்றன. இத்தகைய சாதகமான சூழ்நிலைகளை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications