மேகதாது அணையை கட்ட வலியுறுத்தி ஜனவரி 9 முதல் பாத யாத்திரை.. கர்நாடக காங்கிரஸ் அறிவிப்பு!
பெங்களூரு: தமிழகம்-கர்நாடகம் இடையே மேகதாது அணை விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
''பெங்களுரு குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்காக மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் மேகதாது அணை திட்டத்தை தொடங்குவோம்'' என்று கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா சர்ச்சை பேட்டி அளித்து பிரச்சினையை தொடங்கி வைத்தார்.
ஒப்பந்த விதிகளின்படி காவிரியில் இருந்து தமிழ்நாடு தண்ணீர் பெற்று வருகிறது. இந்த காவிரி நீர்தான் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு உயிர்நாடியாக இருக்கிறது. ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் மேகதாது அணை தொடர்பாக வழக்கு உள்ளதால், கர்நாடக அரசின் பிடிவாதத்திற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் காவிரி நீரையே நம்பி இருக்கும் டெல்டா மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பாஜகவுக்கு ராமர்...எங்களுக்கு அனுமர்.. உ.பி. தேர்தலில் கலக்கும் அகிலேஷ் யாதவின் ரத யாத்திரை
ஓரணியில் தமிழக கட்சிகள்
''மேகதாது அணை கட்டக்கூடாது. இது நல்லுறவுக்கு உகந்த சூழ்நிலை அல்ல'' என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், எடியூரப்பாவுக்கு அதிரடி பதில் கொடுத்தார். காவிரி மேலாண்மை வாரியத்திலும் தமிழ்நாடு தங்களது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து இருந்தது. மேலும், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் ஆளும் கட்சி, எதிர்க்க்கட்சி என அனைத்து கட்சிகளும் ஓன்று சேர்ந்தன. தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் ஓன்று சேர்ந்து மேகதாது அணை கட்ட முடிவெடுத்து இருக்கும் கர்நாடகா அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது.
மேகதாது அணைக்கு எதிராக தீர்மானம்
பின்னர் இந்த தீர்மான நகலை கட்சிகளின் பிரதிநிதிகள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் ஒப்படைத்தனர். மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி அளிக்க கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலினும் கடிதம் எழுதினார். காவிரி மேலாண்மை கூட்டம் நடைபெறும்போதெல்லாம் மேகதாது அணை பிரச்சினையை தமிழக அரசு எடுத்துரைத்து வருகிறது.
மேகதாது அணைக்கு ஆதரவாக காங்கிரஸ் பாத யாத்திரை
மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று கர்நாடகா முதல்வர் பசுவராஜ் பொம்மையும் திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் மேகதாது அணைக்கு எதிராக குரல் கொடுத்து வரும் நிலையில், கர்நாடகா காங்கிரஸ் மேகதாது அணைக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு பெங்களுருவில் பேட்டியளித்த கர்நாடக காங்கிரஸ் ஊடகப்பிரிவு பொறுப்பாளர் சுதர்சன், மேகதாதுவில் அணை கட்ட தாமதிக்கும் கர்நாடக பாஜக அரசை கண்டித்து ஜனவரி 9-ம் தேதி மேகதாதுவில் இருந்து பாதயாத்திரை தொடங்கும் என்று பேசினார்.
தமிழக அரசு எதிர்க்க கூடாது
மேகதாதுவில் அணையை உருவாக்க கர்நாடகத்தின் வளர்ச்சி இலக்கை அடைய அனைத்து தரப்பினருக்கும் அவர் அழைத்து விடுத்தார். மேகதாது அணை மின்சாரம் உற்பத்திக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், கர்நாடகாவின் பல பகுதிகளுக்கும், குறிப்பாக பெங்களூரு நகருக்கும் குடிநீர் ஆதாரமாக திகழும் என்று சுதர்சன் தெரிவித்தார். இந்த பாதயாத்திரையானது கர்நாடகாவில் உள்ள பாஜக அரசுக்கு அழுத்தம் கொடுக்க உதவும் என்று கூறிய சுதர்சன், இந்த திட்டத்தை தமிழக அரசு எதிர்ப்பதில் எந்த காரணமும் இல்லை என்றார். 9-ம் தேதி தொடங்கும் பாதயாத்திரை சுமார் 10 முதல் 12 நாட்கள் வரை தொடரும் என்றும் சுதர்சன் தெரிவித்தார்.
தமிழகத்தின் நலன்களை பாதிக்காது
இதேபோல் கார்நாடகா செய்தித் தொடர்பாளர் எம்.லட்சுமணா கூறுகையில், '
மேகதாது அணை திட்டம் தமிழகத்தின் நலன்களைப் பாதிக்காது. இது கர்நாடகாவைப் போலவே தமிழகத்திற்கும் பயனளிக்கும். பாதயாத்திரை கட்சி சார்பற்ற அடிப்படையில் நடைபெறும் என்றும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக உறுப்பினர்களையம் பாத யாத்திரையில் பங்கேற்கும்படி அழைத்து விடுத்துள்ளதாகவும் லட்சுமணா கூறினார். இந்த நிலையில் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக மக்களை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஏமாற்றி வருவதாக முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டி உள்ளார்.