குழந்தைகளுக்கு School fees கட்டமுடியாமல் தவிக்கும் அரசு ஊழியர்கள்.. மார்ச் மாத சம்பளத்தை போடாத கர்நாடக அரசு
பெங்களூர்: கர்நாடகாவில் அரசு ஊழியர்கள் பலருக்கு தங்களது மார்ச் மாத சம்பளத்தை இன்னும் பெறாத நிலையில் பெரும் கவலையில் உள்ளனர். ஏப்ரல் 18 வரை பல துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு சம்பளம் இன்னும் வரவில்லை. பொதுவாக ஒவ்வொரு மாதத்தின் முதல் 5 நாட்களுக்குள் சம்பளம் வங்கிக் கணக்கில் வரும். ஆனால் இந்த முறை நிலைமை மோசமாகியுள்ளது, கிட்டத்தட்ட 3 வாரங்களாக சம்பளம் கிரெடிட் செய்யப்படாமல் உள்ளதால் பல ஊழியர்கள் குழந்தைகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.
வருவாய் துறை, கல்வி, போலீஸ், விலங்கு பராமரிப்பு, தகவல் மற்றும் பொதுத் தொடர்பு ஆகிய முக்கிய துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் இந்த சம்பள தாமதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்துறையில் சில ஊழியர்கள் ஏப்ரல் 9 அல்லது 10-ம் தேதி சம்பளம் பெற்றிருந்தாலும், பெரும்பாலானோர் இன்னும் சம்பளத்திற்காக காத்திருக்கின்றனர். இந்த பிரச்சனை ஒரு துறையுடன் மட்டும் நிற்கவில்லை. மாநிலம் முழுவதும் பரவியுள்ளது.

என்ன காரணம்?
பொதுவாக ஒரு நிதி ஆண்டு முடிவில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வருவதில் தாமதமாவது இயல்பு, இது கர்நாடக அரசு ஊழியர்களுக்கும் பழக்கப்பட்ட விஷயம் தான். ஆனால் இந்த தாமதம் சில நாட்கள் மட்டுமே இருக்கும், ஆனால் இந்த முறை ஒன்று - இரண்டு வாரங்களை தாண்டி மூன்று வாரங்களுக்கு மேல் தாமதமாகியுள்ளது.
கர்நாடக கல்வித் துறை அதிகாரி ஒருவர், "இவ்வளவு நீண்ட தாமதம் இதற்கு முன்பு எப்போதும் நடந்ததில்லை" என்று கூறியுள்ளார். நிதியாண்டின் முடிவு, புதிய கணக்கு துவக்கம் ஆகிய அடிப்படையான விஷயங்களை தாண்டி அரசின் கணினி அமைப்பில் தொழில்நுட்ப கோளாறு மற்றும் அரசின் நிதி பற்றாக்குறை ஆகியவை இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகின்றன.
கிருஹலக்ஷ்மி திட்டம்
இந்த சம்பள தாமதத்துக்கு மற்றொரு முக்கியமான காரணத்தை கர்நாடக அரசு ஊழியர்கள் கூறுகின்றனர். ஏப்ரல் 9 அன்று நடைபெற்ற தாவண்கரே தெற்கு மற்றும் பாகல்கோட் இடைத்தேர்தலுக்கு முன்பாக, சம்பளத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி கிருஹலக்ஷ்மி திட்டத்துக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக அந்த திட்டத்தின் பணம் தாமதமாகியிருந்ததால் சுமார் 6,000 கோடி ரூபாய் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
கிருஹலக்ஷ்மி திட்டம் என்றால் என்ன?
கர்நாடக அரசின் கிருஹலக்ஷ்மி திட்டம், குடும்பத் தலைவிகளின் பொருளாதார நிலையை வலுப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படும் முக்கிய நலத்திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழ் மற்றும் மேல் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படுகிறது. இதன் மூலம் பெண்களுக்கு பொருளாதாரச் சுதந்திரத்தை அளித்து, குடும்பத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தப்படுகிறது.
அரசின் பதில்
கர்நாடக அரசின் கருவூல துறை அதிகாரிகள் கூறுகையில், நிதியை ஏற்பாடு செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் நிலுவை சம்பளங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். திங்கட்கிழமைக்குள் பெரும்பாலான ஊழியர்கள் சம்பளத்தை பெறுவார்கள் என கூறியுள்ளனர்.
மாநில நிதித் துறை முதன்மை செயலாளர் ரிதேஷ் குமார் சிங், அரசின் நிதியை கிருஹலக்ஷ்மி திட்டத்திற்கு அனுப்பப்பட்டதாக கூறப்படும் புகார்களை மறுத்துள்ளார். சம்பளம் வழங்கும் பொறுப்பு துறை அலுவலர்களிடம் (டிடிஓக்கள்) உள்ளது. சில துறைகளில் நிர்வாக குளறுபடிகள் இருக்கலாம் என்றும், ஊழியர்களுக்கு சம்பளம் வராததிற்கு வேறு காரணம் ஏதும் இல்லை என்றும் அவர் விளக்கியுள்ளார்.
கர்நாடக அரசு ஊழியரின் புலம்பல்
கர்நாடக ஊழியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஏப்ரல் மாதங்களில் சில நேரங்களில் தாமதம் இருப்பது இயல்பு என்றாலும், இந்த முறை புகார்கள் அதிகரித்துள்ளது, குறிப்பாக ஆசிரியர்களிடமிருந்து அதிக புகார்கள் வருகின்றன. சில சங்க உறுப்பினர்கள், அரசு ஊழியர்களுக்கான நிதி பகுதி பகுதியாக விடுவிக்கப்படுவதால் தான் இந்த தாமதம் அதிகரிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பள தாமதம் வெறும் அலுவலகப் பிரச்சனையாக இல்லாமல், ஊழியர்களின் அன்றாட வாழ்க்கையை பாதித்துள்ளது. ஒரு அரசு ஆசிரியர் கூறுகையில் இது பள்ளி கட்டணம், சீருடை, வீட்டு செலவுகள் அதிகம் இருக்கும் காலம். இதனால் பல குடும்பங்கள் அவர்களின் பிள்ளைகளின் ஸ்கூல் பீஸ் கட்ட முடியாத நிலை உருவாகியுள்ளது. சம்பளம் வராததால் குடும்பங்கள் பெரும் நிதி அழுத்தத்தில் உள்ளன என்று தெரிவித்தார். வீட்டு செலவுகளை சமாளிப்பது கூட கடினமாகிவிட்டது எனவும் பல அரசு ஊழியர்கள் புலம்பி வருகின்றனர்.
கர்நாடக அரசின் பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் நிதி விடுவிப்பு செயல்முறையில் ஒருங்கிணைப்பு குறைபாடு தான் இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம். எனவே இந்த பிரச்சனை தொழில்நுட்ப கோளாறு மட்டுமல்ல, நிர்வாக ரீதியான சிக்கல்களுடனும் தொடர்புடையது. கர்நாடகாவில் மொத்தம் சுமார் 6.4 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். இந்த சம்பள தாமதம் தொழில்நுட்ப கோளாறு என எளிதாக கூறப்பட்டாலும் 6 லட்சம் குடும்பங்கள் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பெரிய பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications