கணவனாக இருந்தாலும் மனைவியின் விருப்பம் இல்லாவிட்டால் அது பலாத்காரம் தான்.. கர்நாடகா ஹைகோர்ட் அதிரடி
பெங்களூர்: மனைவியின் விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி அவருடன் உடலுறவு கொள்வதும் ஒரு வகையான பலாத்காரம்தான் என கூறி கணவர் மீதான பலாத்கார வழக்குப் பதிவை நீக்குவதற்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஒரு முக்கியமான தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது விருப்பமில்லாத மனைவியுடன் கட்டாயமாக உடலுறவு கொண்டதாக மனைவி அளித்த புகாரின் பேரில் கணவர் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அது போல் தனது மகளையும் கட்டாயப்படுத்தி அவரை பலாத்காரம் செய்ததால் அவர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனது மனைவி கொடுத்த பலாத்கார புகாரை நீக்க வேண்டும் என்பதற்காக கணவர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தை நாடினார்.

நீதிபதி
அந்த கணவர் தொடுத்த வழக்கு நீதிபதி எம் நாகபிரசன்னா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் கணவர் மீதான பலாத்கார வழக்கை நீக்க உத்தரவிட முடியாது என தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பின் போது நீதிபதி முன் வைத்த கருத்துகள்: மனைவியின் விருப்பம் இல்லாமல் அவரை கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்ள கூடாது.

பெண்ணின் மனம்
அவ்வாறு கொள்வதன் மூலம் அந்த பெண்ணின் மனமும் உடலும் கடுமையாக பாதிக்கும். இது போன்ற கணவர்களின் செயல்கள் மனைவிகளின் மனங்களை பாதிக்கின்றன. மற்ற ஆண் ஒரு பெண்ணின் மீது செய்யும் பலாத்கார செயல்களை ஒரு கணவர் செய்தால் அந்த குற்றச்சாட்டிலிருந்து அவருக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது மூத்த வழக்கறிஞரின் (கணவர் தரப்பு) வாதமாக உள்ளது.

கட்டாயப்படுத்துதல் கூடாது
ஆனால் எனது கருத்து என்னவென்றால் பெண்ணின் மீது கணவர் கட்டாயப்படுத்தி உறவு கொண்டால் அதை ஏற்க முடியாது. ஒரு ஆண் ஆண்தான், ஒரு செயல் செயல்தான், பலாத்காரம் பலாத்காரம்தான். அதை கணவர் என்ற பெயரில் ஒரு ஆண், மனைவி எனும் பெண் மீது நடத்தினாலும் அது குற்றம்தான்.

ஆணும் பெண்ணும் சமம்
திருமணம் செய்து கொண்டதாலேயே கணவருக்கு எந்த வித சிறப்பு தனிப்பட்ட சலுகைகளை தர முடியாது. ஒரு கணவர் தனது மனைவியை தனக்கு சொந்தமாகவே பார்க்கிறார். கணவர்கள் என்பவர்கள் மனைவிகளை ஆள்பவர்களாகவே பழங்கால மரபுகளும் கலாச்சாரங்களும் பார்க்கின்றன. அரசியலமைப்பு சட்டத்தின் படி ஆணும் பெண்ணும் சரிசமமாகவே பாவிக்க வேண்டும். எனவே கணவர் மீதான பலாத்கார புகாரை ரத்து செய்ய முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications