கைமீறி போகுது! கும்பலாக கதவை திறந்து! இஸ்லாமிய மாணவிகளின் வகுப்பிற்குள் நுழைந்த இந்துத்துவா கும்பல்
பெங்களூர்: கர்நாடகாவில் இருக்கும் பியு கல்லூரிகளில் பல இடங்களில் கலவரம் ஏற்பட்டுள்ளது. சிவமொக்காவில் இருக்கும் அரசு பியு கல்லூரி ஒன்றில் மாணவர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இஸ்லாமிய மாணவியர் ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு வர கர்நாடகாவில் உள்ள பல்வேறு பியு கல்லூரிகளில் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவில் உடுப்பி, சிவமொக்கா, சிக்மகளூர், மங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய மாணவிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்துத்துவா அமைப்பை சேர்ந்த மாணவர்கள் இஸ்லாமிய மாணவியர் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இஸ்லாமிய மாணவியருக்கு எதிராக இந்துத்துவா அமைப்பினர் கடுமையான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
"ஹிஜாப்போடு வர கூடாது" புதுச்சேரியிலும் தடுக்கப்பட்ட மாணவி! பல மாநிலங்களில் தீயாய் பரவும் எதிர்ப்பு
கலவரம்
இதையடுத்து கர்நாடகாவில் இருக்கும் பியு கல்லூரிகளில் நேற்று பல இடங்களில் கலவரம் ஏற்பட்டது. சிவமொக்காவில் இருக்கும் அரசு பியு கல்லூரி ஒன்றில் மாணவர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அங்கு பர்தா அணிந்து வந்த மாணவிகள் மீது இந்துத்துவா மாணவர்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதனால் அங்கு மாணவ, மாணவியர் இடையே கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி அங்கு மாணவர்களை கலைத்தனர்.
சிவமொக்கா
இது மட்டுமின்றி சிவமொக்காவில் உள்ள இன்னொரு பியு கல்லூரியில் மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து அங்கு தேசிய கொடி ஏற்றும் கம்பத்தில் காவி கொடியை ஏற்றிய சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் இந்துத்துவா மாணவர்கள் பலர் அங்கு பியு கல்லூரி வளாகத்தில் கல்லூரி சொத்துக்களை சூறையாடும் வீடியோக்களும் இணையம் முழுக்க வைரலாக பரவி வருகிறது. கர்நாடக பியு கல்லூரிகள் கலவர பூமியாக மாறிக்கொண்டு இருக்கிறது.
ஹிஜாப்
இப்படிப்பட்ட நிலையில்தான் அங்கு பியு கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 3 நாட்களுக்கு கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவதாக அரசு அறிவித்துள்ளது. அங்கு இது தொடர்பாக அரசு வெளியிட்ட உத்தரவில் மாணவ, மாணவியர் பள்ளி சீருடைகளை மட்டுமே அணிய வேண்டும். இது இல்லாமல் வேறு உடைகள் எதையும் அணிய கூடாது. பள்ளி விதிகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது. அதாவது ஹிஜாப் அணிந்து மாணவிகள் வகுப்பிற்கு வர கூடாது என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஹிஜாப் கர்நாடகா
ஆனால் இதற்கு எதிராக கர்நாடக இஸ்லாமிய மாணவிகள் தரப்பு வழக்கு தொடுத்துள்ளார். கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில்தான் நேற்று கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் இருக்கும் வகுப்பறை ஒன்றில் இந்துத்துவா மாணவர்கள் கும்பலாக நுழைந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிக்மங்களூரில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. அங்கு இஸ்லாமிய மாணவிகள் தனி வகுப்பறையில் அமர வைக்கப்பட்டு இருந்தனர்.
வீடியோ
அதேபோல் இஸ்லாமிய மாணவர்களும் இதே வகுப்பறையில் அமர வைக்கப்பட்டு இருந்தனர். போராட்டத்திற்கு செல்லாத சில இந்து மாணவ, மாணவியரும் இங்கே இருந்துள்ளனர். பாதுகாப்பு கருதி கதவை சாத்தி வைத்துக்கொண்டு மாணவர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். இந்த நிலையில்தான் இந்துத்துவா மாணவர்கள் கும்பலாக வந்து கதவின் மேல் பக்க ஜன்னல் வழியாக திறந்து கொண்டு வகுப்பிற்குள் புகுந்து போராடி உள்ளனர்.
கதவை திறந்து கொண்டு போராட்டம்
ஆனால் இந்துத்துவா மாணவர்கள் அங்கு தாக்குதல் எதிலும் ஈடுபடவில்லை. மாறாக வகுப்பிற்குள் புகுந்து ஜெய் ஸ்ரீ ராம் என்று கூச்சல் போட்டு கோஷம் எழுப்பி உள்ளனர். இந்த சம்பவம் வீடியோவாக இணையம் முழுக்க பரவி வருகிறது. அங்கு இந்துத்துவா மாணவர்கள், இஸ்லாமியர் இடையிலான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நிலைமை பல இடங்களில் கைமீறி போய் உள்ளது. இதையடுத்தே தற்போது 3 நாட்கள் அங்கு பியு கல்லூரிகளில் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.