'நீங்க செத்துவிடுவது மேல்.. எனக்கு பெரிய மனசு இல்ல'.. அரிசி கேட்ட விவசாயிக்கு..ஷாக் கொடுத்த அமைச்சர்
பெங்களூரு: பொது விநியோக திட்டத்தில் வழங்கப்படும் அரிசி அளவு குறைக்கப்பட்டது ஏன் என்று கேட்ட விவசாயியிடம், பாஜக அமைச்சர் உமேஷ் கட்டி செத்துவிடுங்கள் என்று பதில் கூறிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே விவசாயிகள் பருவம் தவறிப் பெய்யும் மழை, மகசூல் குறைவது, விளைவிக்கும் பயிர்களுக்குச் சரியான விலைகள் கிடைக்காமல் போவது ஆகியவற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகளின் வருவாயை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், விவசாயி ஒருவரைப் பார்த்துச் செத்துவிடுங்கள் என அமைச்சர் கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"மேட்டருக்கு" வந்த பாமக.. மீண்டும் ஜெயிச்சா 3 அமைச்சர்களாம்.. குழம்பிபோன அதிமுக.. இப்படி ஒன்னு ஓடுது
பொது விநியோக திட்டம்
கர்நாடகா மாநிலத்தில் எடியூரப்பா அமைச்சரவையில் உணவுத் துறை அமைச்சராக இருப்பவர் உமேஷ் கட்டி. இவருக்குக் கடந்த சில தினங்களுக்கு முன் விவசாயி ஒருவர் ஃபோன் செய்துள்ளார். பொது விநியோக திட்டத்தில், ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 5 கிலோ அரிசியை 2 கிலோவாக குறைத்திருப்பது நியாமா எனக் கேள்வி எழுப்புகிறார். அதற்கு அரிசியுடன் சேர்த்து 3 கிலோ ராகி வழங்கப்படுவதாக அமைச்சர் பதிலளிக்கிறார்.
விவசாயி கேள்வி
அதற்கு விவசாயி, 'தற்போது மாநிலத்தில் ஊரடங்கு வேறு அமல்படுத்தப்பட்டுள்ளது. எங்களால் இப்போது சம்பாதிக்கவும் முடியாது, எனவே, இது போதுமானதாக இருக்காது" எனக் கூறுகிறார். அதற்கு மத்திய அரசு அறிவித்தபடி அடுத்த மாதம் முதல் மாதம்தோறும் 5 கிலோ அரசி அல்லது கோதுமை வழங்கப்படும் என அமைச்சர் பதில் கூறுகிறார். உடனே விவசாயி, "அடுத்த மாதம் தான் வழங்கப்படும் என்றால் அதுவரை உணவுக்கு நாங்கள் என்ன செய்வது? செத்து மடிவதா?" எனக் கேட்கிறார்.
செத்துப்போவதே மேல்
இதனால் கடுப்பான அமைச்சர், "நீங்கள் செத்துப்போவதே மேல். இதன் காரணமாகவே நாங்கள் அரசியைக் குறைத்தோம். இனி எனக்கு ஃபோன் செய்யாதீர்கள்" என்று கூறி ஃபோனை கட் செய்கிறார். அமைச்சரின் இந்த ஆடியோ இணையத்தில் வெளியானது. அமைச்சரின் பேச்சுக்குக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், அவரை அமைச்சரவையிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
முதல்வர் வருத்தம்
அமைச்சரின் இந்த பொறுப்பற்ற பேச்சு இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா வருத்தம் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உமேஷ் கட்டி கூறுகையில், "அவர் என்னைத் தூண்டிவிடும் வகையில் பேசினார். நாங்கள் செத்துப்போக முடியுமா என்று கேட்டால் வேறு என்ன பதில் கூற முடியும்" எனக் கேள்வி எழுப்பினார்.
பெரிய மனசு இல்லை
அரசு உங்களைக் காக்கும் எனக் கூறியிருக்கலாமே எனச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், "எனக்கு உங்களைப் போலப் பெரிய மனசு இல்லை. எனக்குச் சின்ன மனசு தான்" என்றும் மீண்டும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பதிலளித்தார். அமைச்சர் உமேஷ் கட்டியின் பொறுப்பற்ற பேச்சுக்கு எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி பாஜக தலைவர்களும்கூட கண்டனம் தெரிவித்துள்ளனர்.