அடுத்த சர்ச்சை.. கர்நாடகத்தில் எஸ்சி-எஸ்டி மாணவர்களுக்கு வேதக்கணிதம்.. கிளம்பிய எதிர்ப்பால் விவாதம்
பெங்களூர்: கர்நாடக பள்ளி கல்வித்துறை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது எஸ்சி-எஸ்டி மாணவர்களுக்கு வேதக்கணிதம் கற்பிக்க வேண்டும் என்ற அறிவிப்பு விவாதமாகி சர்ச்சையானதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கர்நாடக கல்வித்துறை தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. பாடப்புத்தகங்களில் இருந்து திப்பு சுல்தான் குறிப்புகள் நீக்கம் செய்யப்பட்டன.
மேலும் 10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், சமூகச் சீர்திருத்தம் என்ற தலைப்பின் கீழ் இருந்த தந்தை பெரியார், கேரளத்தின் நாராயண குரு ஆகியோரைப் பற்றிய குறிப்புகளை நீக்கப்பட்டன. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தின.
தமிழக பள்ளி மாணவர்களே.. வந்தாச்சு காலாண்டு விடுமுறை அறிவிப்பு.. எத்தனை நாட்கள் லீவு தெரியுமா?
சாவர்க்கர் சர்ச்சை
இந்த சர்ச்சை அடங்குவதற்குள் 8 ஆம் வகுப்பு கன்னட மொழி பாடப்புத்தகத்தில் ''அந்தமான் சிறைச்சாலையில் சாவர்க்கர் அடைக்கப்பட்டு இருந்த சிறிய அறையில் சிறிய துளை கூட கிடையாது. ஆனால், அவரது அறைக்கு எப்படியோ ஒரு புல் புல் பறவை வந்து விடும். அந்த பறவையின் சிறகின் மீது ஏறி அமரும் சாவர்க்கர் தினமும் தாய் மண்ணிற்கு வந்து செல்வார்.'' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
வேதக்கணிதம் கற்பிக்க முடிவு
இதன் தொடர்ச்சியாக தற்போது கர்நாடகத்தில் புதிதாக ஒரு சர்ச்சை கிளம்பி உள்ளது. அதாவது சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா பிளாக் கல்வித்துறை சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதாவது சிட்லகட்டா வட்டாரத்தில் உள்ள பள்ளிகளில் 5ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரையிலான எஸ்சி/எஸ்டி மாணவர்களுக்கு வேதக்கணிதம் கற்பிக்க வேண்டும். இதற்காக கிராம பஞ்சாயத்துகளில் இருந்து ஒதுக்கப்பட்டும் எஸ்சி/எஸ்டி நலத்திட்டத்துக்கான நிதியை பயன்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
வேதக்கணிதத்துக்கு எதிர்ப்பு
இத்திட்டம் சித்ரதுர்கா மாவட்டத்தில் நடைமுறையில் இருப்பதாக கூறப்படுகிறது. வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களுக்கு 2 மணிநேரம் வேதக்கணிதப்பாடம் எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது. அதோடு மாணவர்கள் தற்போது அறிவியல் பூர்வமான கணிதத்தை படிக்கும் நிலையில் வேதக்கணிதம் அவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் என்ற விவாதங்கள் எழுந்தன. இதனால் வேதக்கணிதத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.
உத்தரவு நிறுத்தம்
இதுதொடர்பான செய்திகள் வெளியான நிலையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் தான் அந்த உத்தரவு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. கல்ித்துறையில் சார்பில் உரிய அறிவிப்பு வந்த பிறகு அதனை செயல்படுத்தலாம் என கூறி அது நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி கிராம மேம்பாடடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் மூத்த அதிகாரிகளிடம் கேட்டபோது, ‛‛சிட்லகட்டா வட்டார கல்வித்துறையின் செயல்படாடு பற்றிய விபரம் எங்களுக்கு வரவவில்லை'' என்றனர்.
வேதக்கணிதம் என்றால் என்ன?
பொதுவாக கணக்கு பாடம் புரியாத நபர்கள் வேதக்கணிதத்தை படிக்கின்றனர். வேதக்கணிதம் என்பது 20ம் நூற்றாண்டில் துவக்கத்தில் ஸ்ரீபாரதி கிருஷ்ணா தீர்த்த சுவாமி என்ற கணித மேதையால் உருவாக்கப்பட்டது. இது 16 முதன்மை வாய்ப்பாடு, 13 துணை வாய்ப்பாடு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது. இதன்மூலம் சிக்கலான கணக்குகளுக்கும் எளிதான முறையில் தீர்வு காண முடியும் எனவும், இது மிக வேகமான கணக்கீட்டு முறை எனவும் நம்பப்படுகிறது.