காங்கிரசுக்கு நல்ல செய்தி.. கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்குமாம்.. பாஜகவுக்கு கஷ்டம் தான்! புதிய சர்வே
பெங்களூர்: கர்நாடகாவில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இப்போதே அரசியல் களம் அங்குச் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. இதனிடையே சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வே-இல் காங்கிரஸ் அங்கு ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கு முன்னதாக இந்தாண்டு மட்டும் மொத்தம் 9 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திரிபுரா உள்ளிட்ட 3 மாநிலங்களில் ஏற்கனவே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது.
அடுத்தபடியாக கர்நாடகாவில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. குஜராத்தில் பெற்ற மெகா வெற்றியுடன் உற்சாகமாக இறங்கும் பாஜக, அதேபோல கர்நாடகாவிலும் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறது.
3 மேஜர் பாயிண்ட்..நடிகர் சுதீப்பை காங்கிரஸ் குறி வைப்பது ஏன்? கர்நாடகா தேர்தலில் ‛கை’ பிளான் இதுதான்
கர்நாடகா
கடந்த முறை கர்நாடகாவில் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் கூட பாஜகவால் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் உடனடியாக ஆட்சியை அமைக்க முடியவில்லை. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் ஐக்கியமான பின்னரே, அவர்களால் அங்கு ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. கடந்த முறை பாஜக வெல்ல எடியூரப்பா முக்கிய காரணமாக இருந்தார். ஆனால், இந்த முறை பெரிய ரிஸ்க் எடுத்து, எடியூரப்பாவை முன்னிறுத்தாமல் தேர்தலைச் சந்திக்கிறார்கள். ஏற்கனவே, பசவராஜ் பொம்மை அரசு மீது ஊழல் புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த தேர்தல் அவர்களுக்குச் சவால் மிகுந்த ஒன்றாக மாறியுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும்
இதனிடையே கர்நாடக தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பு முடிவுகள் இப்போது வெளியாகத் தொடங்கியுள்ளது. இதில் ஹைதராபாத்தைச் சேர்ந்த எஸ்ஏஎஸ் குழு கர்நாடகாவில் ஐபிஎஸ்எஸ் அமைப்புடன் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. அதில் இப்போது கர்நாடகாவில் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மொத்தம் 224 இடங்களைக் கொண்ட கர்நாடகாவில் 108 முதல் 114 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வென்று ஆட்சியை அமைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
பாஜக
இப்போது ஆளும் கட்சியாக உள்ள பாஜக ஆட்சியைத் தக்க வைக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. கர்நாடக தேர்தலில் பாஜக 65 முதல் 75 இடங்களில் மட்டுமே வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் 37 இடங்களில் வென்ற ஜேடிஎஸ், இந்த முறை 24-34 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 20 முதல் ஜனவரி 15 வரை கர்நாடகாவில் பல்வேறு இடங்களில் இந்தக் கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. இதர சிறிய கட்சிகள் 6 இடங்கள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
வாக்கு சதவிகிதம்
வாங்கு சதவிகிதத்தைப் பொறுத்தவரைக் காங்கிரஸ் கட்சி கடந்த முறை 38.14% வாக்குகளைப் பெற்றிருந்தது. இந்த முறை அதன் வாக்கு 1.86% வரை அதிகரித்து சுமார் 40 சதவீதமாக இருக்கும்.. அதேநேரம் பாஜக கடந்த முறை 36.35% வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், இந்த தேர்தலில் பாஜகவுக்கு 34% வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல ஜேடிஎஸ் கட்சியின் வாக்கு சதவிகிதமும் கூட 18.3 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக 1.3 சதவீதமாகக் குறையும் என்று கூறப்பட்டுள்ளது. சிறிய கட்சிகள் 6% வரை வாக்குகளைப் பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
பிராந்தியம் வாரியாக
பிராந்தியம் வாரியாக பார்க்கும் போது.. பெங்களூரில் காங்கிரசுக்கு 13-14 இடங்களும், பாஜகவுக்கு 9-10 இடங்களும் கிடைக்கும்.. பாஜக அதிகம் நம்பும் பழைய மைசூரு பகுதியில் பாஜகவுக்கு 10 முதல் 14 இடங்கள் மட்டுமே கிடைக்கும்.. அதேநேரம் அங்குக் காங்கிரஸ் 24 முதல் 25 இடங்களிலும், ஜேடிஎஸ் 21 முதல் 22 இடங்களிலும் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து பெலகாவி அல்லது கித்தூர் கர்நாடகா பகுதியில் காங்கிரசுக்கு 27 முதல் 28 இடங்களும், பாஜகவுக்கு 14 முதல் 16 இடங்களும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற பகுதிகள்
பாஜகவின் கோட்டையாகக் கருதப்படும் கடலோர கர்நாடகாவில், பாஜக ஆதிக்கம் தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அங்கு பாஜக 12 முதல் 13 இடங்களை வெல்லும் என்றும் காங்கிரஸ் ஏழு முதல் எட்டு இடங்களை மட்டுமே வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது ஹைதராபாத்- கர்நாடகா பிராந்தியத்தில் பாஜகவுக்கு 12 முதல் 14 இடங்களும், காங்கிரஸுக்கு 21 - 22 இடங்களும் கிடைக்கலாம். அதேபோல மத்திய கர்நாடகாவில் காங்கிரஸ் 16 -17 இடங்களையும், பாஜக 8- 9 இடங்களையும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன காரணம்
பாஜகவின் மூத்த தலைவரான எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்கியதே பல இடங்களில் பாஜகவின் வாக்கு சரியக் காரணம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்குப் பிற்படுத்தப்பட்டோர், எஸ்சி/எஸ்டி மற்றும் சிறுபான்மை சமூகத்தினருக்கு அதிக ஆதரவு உள்ளது. அங்கு முக்கிய சமூகமாகக் கருதப்படும் வொக்கலிகா சமூகத்தினர் 50 சதவீதம் ஜேடிஎஸ் கட்சிக்கும், 38 சதவீதம் பேர் காங்கிரஸ் கட்சிக்கும், 10 சதவீதம் பேர் பாஜகவுக்கும் ஆதரவு அளிக்கின்றனர். இந்தத் தேர்தலில் ஒவைசியின் மஜ்லீஸ் கட்சி களமிறங்கினாலும் கூட அது 6-7 தொகுதிகளில் மட்டுமே ஓரளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இந்த சர்வே-இல் கூறப்பட்டுள்ளது.