சிறையில் கைதிகளுடன் ஒரு நாள் செலவிட ஆசையா.. அப்ப ரூ 500 கட்டுங்கள்.. பெலகாவி சிறை ஆஃபர்
பெங்களூர்: சிறையில் தங்க ஆசையா இருக்கிறதா அப்படியெனில் ரூ 500 செலுத்துங்கள் என கர்நாடக மாநிலம் பெலகாவி சிறை நிர்வாகம் ஒரு அதிரடி ஆஃபரை அளித்துள்ளது.
சிறையில் ஒரு நாள் என்ற திட்டத்தை கர்நாடகா மாநிலம் பெலகாவி சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது. ஒரு நாள் சிறையில் தங்கும் அனுபவம் கிடைத்துவிட்டால் குற்றங்களை செய்வோர் கொஞ்சம் யோசனை செய்வர் என்பதற்காக இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
கர்நாடகா மாநிலம் பெலகாவியில் ஹிண்டல்கா சிறை உள்ளது. இந்த சிறையில் விசாரணை கைதிகள், ஆயுள் தண்டனை கைதிகள் என 500- க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

கைதியாக வாழும் திட்டம்
இந்த சிறையில் ரூ 500 செலுத்தினால் ஒரு நாள் முழுவதும் கைதியாக வாழும் திட்டத்தை சிறைத் துறை அதிகாரிகள் அமல்படுத்தியுள்ளனர். இதற்காக மாநில அரசின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது. இது போல் சிறையில் தங்க விரும்புவோர் கைதிகள் போல நடத்தப்படுவர். காலையில் எழுப்புவதிலிருந்து அன்றாட பணிகள் வரை கைதிகள் என்னென்ன செய்வார்களோ அதையெல்லாம் இவர்களும் செய்ய வேண்டும்.

கைதி எண்
சிறை கைதி யூனிபார்ம் வழங்கப்படும். கைதி எண்ணும் கொடுக்கப்படும். சிறைகளில் மற்றொரு கைதியுடன் ஷேர் செய்து கொள்ளலாம். சிறையில் கொடுக்கும் உணவைத்தான் உண்ண வேண்டும். அது போல் சிறை வளாகத்தில் தோட்ட தொழில், சமைத்தல், சுத்தப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

கைதிகளை போல்
தினமும் காலையில் 5 மணிக்கு கைதிகளை போல் 500 செலுத்தி உள்ளே வந்தவர்களும் எழுப்பப்படுவர். காலை டீ குடிப்பதற்கு முன்னர் அவர்களது அறைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். டீ குடித்த ஒரு மணி நேரத்திற்கு பின்னர் காலை டிபன் வழங்கப்படும். காலை 11 மணிக்கு சாம்பார், சாதம் வழங்கப்படும்.

7 மணிக்கு இரவு உணவு
அடுத்தது இரவு 7 மணிக்கு இரவு உணவு வழங்கப்படும். வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை அசைவ சாப்பாடு போடப்படும். 500 ரூபாய் செலுத்தி உள்ளே வர நினைப்பவர்கள் வார இறுதி நாட்களில் வந்தால் கைதிகளுடன் சேர்ந்து சுவையான அசைவ உணவை உண்ணும் வாய்ப்பு கிடைக்கும்.

தலையணை
இரவு படுக்க தலையணையை வாங்கி கொண்டு தூங்க வேண்டும். எல்லா கைதிகளை போல் இவர்களும் பூட்டி வைக்கப்படுவர். இந்த சிறை சுற்றுலாவாசிகள் பயங்கர குற்றம் செய்தவர்களுடன் கூட தங்க நேரிடும். பாலியல் பலாத்கார குற்றவாளியும் தொடர் கொலை செய்தவருமான உமேஷ் ரெட்டி உள்ளிட்டோர் இந்த சிறையில்தான் இருக்கிறார்கள்.

தங்கி பல கஷ்டங்கள்
இது போபல் சிறையில் ஒரு நாள் தங்கி அங்கு பல கஷ்டங்களை அனுபவித்தால், தவறு செய்தால் சிறை செல்ல நேரிடும் என்ற பயம் அவர்களுக்கு இருக்கும். இதனால் குற்றங்களை செய்வதிலிருந்து அவர்கள் விலகியிருப்பர். சுற்றுலா சிறைவாசி என்பதால் அவர்களுக்கு எந்த சலுகையும் காட்டப்படாது. கைதிகளின் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை மக்கள் உணர வேண்டும் என சிறை துறையினர் தெரிவித்துள்ளார்கள்.












Click it and Unblock the Notifications