உடனடி கடன் செயலிகளைப் பயன்படுத்தும் நபரா நீங்கள்? உங்கள் தரவுகள் திருடப்படலாம்
பெங்களூரு: இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் மூலம் கடன்களைப் பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
வங்கிக்குச் சென்றால் அதிக காலம் காத்திருக்க வேண்டும் என்பதாலும் கொரோனா காலத்தில் பொதுமக்கள் வெளியே செல்ல தயங்குவதாலும் பலரும் இந்த உடனடி கடன் செயலிகளைப் பயன்படுத்தி கடன்களைப் பெறுகின்றனர்.
வெறும் சில சான்றிதழ்களை மட்டும் பெற்றுக்கொண்டு உடனடியாக கடன்களை வழங்க தற்போது பல செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ளன.
அப்பல்லோ மருத்துவமனை அட்வைஸ்.. ரஜினிகாந்த் கட்சி குறித்த அறிவிப்பு டிச.31-ல் வெளியாகாது?
தகவல் திருட்டு
கேட்கும் பணம் உடனடியாக வங்கிக் கணக்கில் வந்துவிடுவதால், என்ன மாதிரியான தகவல்களையும் அடையாள ஐடிகளையும் செயலிகளுக்கு அளிக்கிறோம் என்பதைக் கடன் பெறும் நபர்கள் பெரிதாகக் கவனிப்பதில்லை. இவ்வாறு பல லட்சம் இந்தியர்களின் தகவல்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருவதாகவும் இதில் அந்நிய நாடுகளின் தொடர்பு இருக்கலாம் என்றும் பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதிரடி சோதனை
இது குறித்து கடந்த வாரம், பெங்களூரில் இருக்கும் போரயான்சி டெக்னாலஜிஸ், விஸ்ப்ரோ சொல்யூஷன்ஸ் உள்ளிட்ட நான்கு நிறுவனங்களில் சிஐடி போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு தலைமை நிதி அதிகாரி உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து பல முக்கிய ஆவணங்களையும் புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றினர்.
விசாரணை தொடங்கியது எப்படி
உடனடி கடன் செயலிகளைப் பயன்படுத்தும் பலரும் தங்களது விவரங்கள் திருடப்பட்டதாக அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் இந்த விசாரணையைத் தொடங்கியுள்ளனர். திருடப்பட்ட தகவல்களை வைத்து பாலியல் ரீதியான குற்றங்களும் நடைபெறுவதாகப் புகார் பெறப்பட்டது. மேலும், பல சமயங்களில், பாதிக்கப்பட்டவரின் மொபைல் எண்ணை புதிய வாட்ஸ்அப் குழுக்களில் இணைத்து ஆபாசமான செய்திகளை அனுப்புவதாகவும் புகார் அளிக்கப்பட்டது.
சீனாவுக்குத் தொடர்பு
இந்நிலையில், உடனடி கடன் செயலிகளைப் பயன்படுத்தி இந்தியர்களின் தகவல்கள் திருடப்படும் சம்பவத்திற்கும் சீனாவுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாகவும் இதற்குத் தேவையான ஆதாரங்களைக் கைப்பற்றியுள்ளதாகவும் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. மேலும், "நாங்கள் சோதனை செய்த நான்கு நிறுவனங்களின் தாய் நிறுவனங்களும் சீனாவைச் சேர்ந்தவை. அனைத்திலும் சீனாவின் முதலீடு மிக அதிகமாக உள்ளது. இந்த செயலிகள் சேகரிக்கும் தகவல்களைச் சேமிக்கப்படும் சர்வர்கள் அனைத்தும் சீனாவில் அமைந்துள்ளது
மேலும் 10 செயலிகளில் தகவல் திருட்டு
சுமார் 10 உடனடி கடன் செயலிகளை வைத்திருக்கும் வைத்திருக்கும் மேலும் ஒரு மோசடி நிறுவனத்தை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். நாங்கள் விரைவில் அந்த நிறுவனத்தைச் சோதனை செய்யவுள்ளோம். தேவைப்பட்டால், சந்தேகப்படும் நபர்களைக் கைது செய்வோம்" என்று புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.