எம்எல்ஏ சட்டையை பிடித்து இழுத்து தாக்குதல்.. கமிஷனர் வருகை.. போர்க்களமான கர்நாடக தலைமைச் செயலகம்
பெங்களூர்: சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் அளிக்க வந்த காங்கிரஸ் எம்எல்ஏ மீது, அக்கட்சியின் தொண்டர்கள் தலைமைச் செயலகத்துக்குள் வைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் பெங்களூரில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையறிந்து, பாஜக நிர்வாகிகளும், தலைமைச் செயலகத்தில் குவிந்துள்ளதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
கர்நாடக காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு பெரும் சிக்கலில் சிக்கி உள்ளது. கூட்டணியில் உள்ள இரு கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்களும், வரிசையாக ராஜினாமா செய்து வந்தனர்.
இந்த நிலையில், புதிதாக இன்று சிக்பள்ளாப்பூர் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ, சுதாகர் சபாநாயகரிடம், ராஜினாமா கடிதம் அளிக்க தலைமைச் செயலகம் வந்தார். இதனால் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கடும் கோபம் அடைந்தனர்.
சபாநாயகர் அறையிலிருந்து சுதாகர் வெளியே வந்தபோது, அங்கு நின்றிருந்த மாநில அமைச்சர் பிரியங்கா கார்கே, காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் சுதாகர் சட்டை காலரை பிடித்து இழுத்தனர். அப்போது காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சிலர் "உங்களுக்கு வெட்கமாக இல்லையா", "கட்சிக்கு துரோகம் செய்கிறீர்களே அசிங்கமாக இல்லையா" என்று கோஷம் எழுப்பினார்.
இதையடுத்து தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் ஜார்ஜ் அறைக்குள் சுதாகரை, அழைத்துக் கொண்டு சென்றனர். அங்கு பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, அவரை காங்கிரஸ் தலைவர் சித்தராமையா இல்லத்துக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்ட தாகவும் கூறப்பட்டது.
இதை கேள்விப்பட்ட, பாஜக தொண்டர்கள், அமைச்சர் ஜார்ஜ் அறைக்கு வெளியே குவிந்தனர். எனவே, அங்கிருந்த காங்கிரஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் நடுவே மோதல் போக்கு ஏற்படும் சூழல் உருவானது. ஒருவரை ஒருவர் பார்த்து ஆக்ரோஷமாக கையை நீட்டி கோஷமிட்டுக் கொண்டனர்.
"எங்கள் கட்சி பிரச்சினையில் நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள்.." என்று பாஜக நிர்வாகிகளை, பார்த்து காங்கிரஸ் கட்சியினர் கோஷமிட்டனர்.
#Karnataka: A ruckus breaks out at Vidhana Soudha in Bengaluru. More details awaited. pic.twitter.com/fvx2jWBhCr
— ANI (@ANI) July 10, 2019
தலைமைச் செயலகத்தில் அமைச்சரின் அறைக்கு வெளியே இவ்வாறு ஒரு பெரும் மோதல் போக்கு உருவாகுவதை அறிந்த பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் அலோக் குமார் தலைமையிலான உயர் போலீஸ் அதிகாரிகள், தலைமைச் செயலகம் விரைந்தனர்.
அங்கு குவிந்திருந்த இரு கட்சிகளின் நிர்வாகிகளையும் வலுக்கட்டாயமாக அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் தலைமைச் செயலகம் போர்க்களமாக மாறியுள்ளது.