பல்கலைக்கழகத்தில் விநாயகர் கோவிலா?.. கட்ட விடமாட்டோம்.. காவிமயமாக்க முயற்சி என மாணவர்கள் போராட்டம்!
பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் விநாயகர் கோவில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் உள்ளது பிரபலமான பெங்களூர் பலகலைக்கழகம்.
மாநில அரசுக்கு சொந்தமான இந்த பல்கலைக்கழகம் நாட்டின் மிகப்பழமையான பல்கலைகழகங்களில் ஒன்று என்ற பெருமையை கொண்டது.

விநாயகர் கோவில் அமைக்க எதிர்ப்பு
கடந்த 1886-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. நகரின் முக்கிய இடத்தில் அமைந்து இருக்கும் இந்த பல்கலைக்கழகத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் உயர்கல்வியை படித்து வருகின்றனர். இந்த நிலையில், அந்த பெங்களூர் பல்கலைக்கழக வளாகத்தில் விநாயகர் கோவில் கட்ட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அங்கு பயிலும் மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

மாணவர்கள் போராட்டம்
இது குறித்து மாணவர்கள் கூறுகையில், ''பல்கலைக்கழக வளாகத்தில் விநாயகர் கோவில் அமைக்க துணை வேந்தரும் பதிவாளரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இந்த எதிர்ப்பை பொருட்படுத்தாது கோவில் கட்ட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது'' என்று தெரிவித்தனர். மேலும் விநாயகர் கோவில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் திடீரென போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதான்ல் பல்கலைக்கழக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

வேறு இடத்தில் அமைக்க...
பெங்களூரு பல்கலைக்கழகத்தின் ஜனபாரதி வளாகத்தில் ஏற்கனவே விநாயகர் கோவில் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு சாலை அகலப்படுத்தியதால் கோவிலை பல்கலைக்கழக நிர்வாகம் இடித்தது. தற்போது இந்த கோவிலை பல்கலைக்கழக வளாகத்தில் வேறு இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியிருப்பதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் கூறுகின்றன.

காவிமயாக்க முயற்சிக்கிறது
விநாயகர் சிலை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் இது குறித்து கூறுகையில், ''பல்கலைக்கழகங்கள் கல்வி பயில்வதற்கான ஒரு இடம் மட்டுமே... மதத்தை பின்பற்றுவதற்கான இடம் இல்லை... என்று பல்கலைக்கழக மானியக்குழுவின் வழிகாட்டுதல்களில் உள்ளது. ஆனால், இதையும் மீறி பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் பல்கலைக்கழகத்தை காவிமயாக்க முயற்சிக்கிறது" என்றனர்.

மனு அளிக்க முடிவு
பல்கலைக்கழக வளாகத்தில் போராடும் மாணவர்கள் விஷமிகள் என்று குற்றம் சாட்டி பெங்களூரு மாநகராட்சி பொறியாளர் ஒருவர் போலீஸ் நிலையத்தில் புகார் தொடுத்ததால் மாணவர்கள் இடையே மேலும் கொந்தளிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, மாநில கவர்னர் மற்றும் தலைமைச்செயலாளரிடம் இவ்விவகாரம் தொடர்பாக மனு அளிக்கவும் மாணவர்கள் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications