பெங்களூரில் கேங் வார்.. பின்னணியில் ஒரே குடும்பத்தின் 2 பெண்கள்.. பூர்வீகம் தமிழ்நாடு! பரபர தகவல்கள்
பெங்களூர்: இரண்டு பெண்கள்.. அதுவும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.. பெங்களூரு நகரின் மையப் பகுதியில் ஒரு கேங் வாரை உருவாக்கி இருக்கிறார்கள் என்று சொன்னால் நம்பமுடிகிறதா. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
இதில் ஒரு பெண்.. அதுவும் முன்னாள் கவுன்சிலர்.. பட்டப்பகலில் பாஜக அலுவலகம் அருகே வைத்து வெட்டிக்கொலை செய்யப்பட்ட பிறகு இந்தச் சம்பவம் மாநிலம் முழுக்க பரபரப்பாக பேசப்படும் விஷயமாக மாறிவிட்டது.
பெங்களூர் நகரின் மையப்பகுதி காட்டன்பேட். மெஜஸ்டிக் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் பகுதிகளுக்கும், சிட்டி மார்க்கெட் பகுதிக்கும் இடைப்பட்ட ஏரியாதான் இது. மக்கள் நெருக்கம் அதிகம் காணப்படும் பகுதி. இங்கு வசிப்பதில் கணிசமானோர் தமிழர்கள் என்பது மற்றொரு சிறப்பம்சம்.

ரவுடியிலிருந்து கவுன்சிலர்
காட்டன் பேட்டை பகுதியில் அமைந்துள்ளது சலவதிபாளையா என்ற மாநகராட்சி வார்டு. இங்கு கதிரேஷ் (கதிரேசன்) என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இரண்டு கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் சில காவல் நிலையங்களில் குற்றம் சாட்டப்பட்ட நபர்தான் இவர். ஆனால் கவுன்சிலராக மாறியதும் மேலும் பல ஆதரவாளர்களை சேர்த்துகொண்டு மிகப்பெரிய கேங்கை உருவாக்கினார்.

தமிழ்நாட்டுக்காரர்கள்
தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கவுன்சிலர் கதிரேஷ், இந்த பகுதியில் ஏற்கனவே கோலோச்சி வந்த ரவுடி ஜேப்படி ராஜேந்திராவை 2002ம் ஆண்டில் கொலை செய்தவராம். இந்த நிலையில்தான் எதிர்கோஷ்டி 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கதிரேஷை பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்தது. இந்த சம்பவம் அப்போது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

கதிரேஷ் கொலைக்கு பிறகு களம் வந்த ரேகா
இதன் பிறகு அங்கு இடைத் தேர்தல் நடைபெற்ற போது, கதிரேஷ் மனைவி ரேகா பாஜக சார்பில் போட்டியிட களமிறக்கப்பட்டார். அனுதாப அலை மற்றும் சொந்த செல்வாக்கு காரணமாக கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ரேகா. இதன் பிறகுதான் குடும்பத்துக்கு உள்ளேயே இன்னொரு கேங் உருவானது. கதிரேஷின் மூத்த சகோதரி பெயர் மாலா. இவரும் லேசுபட்டவர் கிடையாது. தனது சகோதரன் உயிரோடு இருந்தபோது அவரோடு சேர்ந்து கட்டப் பஞ்சாயத்து, ரவுடியிசம் செய்து வந்துள்ளார்.

கதிரேஷ் சகோதரியுடன் ரேகாவுக்கு மோதல்
2002ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் கதிரேஷ் மட்டுமல்லாது மாலா பெயரும் காவல் நிலையத்தில் இடம் பெற்றுள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இப்படி அடாவடி செய்து வந்த மாலாவுக்கும் ரேகாவுக்கும் சமீப காலமாக உரசல் அதிகரித்துள்ளது. அதாவது அண்ணி மற்றும் நாத்தனார் ஆகிய இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கதிரேஷ் குடும்பத்தாருக்கு ரேகா பண உதவி செய்வதை நிறுத்தி விட்டதும், ரேகா கவுன்சிலராக இருந்த காலகட்டத்தில் அதை பயன்படுத்திக் கொண்டு மாலா குடும்பத்தினர் டெண்டர் எடுத்து அரசு பணிகளை செய்த நிலையில், அதில் வரவேண்டிய நிலுவைத் தொகையை ரேகா நிறுத்தி வைத்ததும் உரசல் அதிகரிக்க காரணம்.

பட்டப் பகலில் ரேகா வெட்டிக் கொலை
இந்த நிலையில்தான் ஜூன் மாதம் 24 ஆம் தேதி, சலுவாதிபாளையா வார்டு பாஜக அலுவலகத்தில் இருந்து சற்று தூரத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கியுள்ளார் ரேகா. அப்போது அங்கே வந்த ஒரு கும்பல் சரமாரியாக கத்தியால் குத்தியும் அரிவாளால் வெட்டியும் ரத்த வெள்ளத்தில் ரேகாவை சாய்த்து விட்டு தப்பி ஓடி விட்டனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரேகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பட்டப்பகலில் பாஜக அலுவலகம் அருகே அந்த கட்சியின் முன்னாள் கவுன்சிலர் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீஸ் தீவிர நடவடிக்கை
இந்த சம்பவத்தை தொடர்ந்து 24 மணி நேரத்துக்குள் காவல்துறையினர் குற்றவாளிகள் சிலரை கைது செய்தனர். அதில் இரண்டு பேர் காவல்துறையினர் தாக்கி தப்பி ஓட முயன்றபோது துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டனர். போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த கொலையின் பின்னணியில் மாலா இருக்கலாம் என்று கருதப்படுவதால் அவரிடம் விசாரணை நடத்துவதற்காக நேற்று அவரை கைது செய்துள்ளனர் போலீசார்.

என்ன காரணம்
அடுத்த ஆண்டு பெங்களூர் மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. மீண்டும் இதே வார்டில் போட்டியிட திட்டமிட்டு இருந்தார் ரேகா. ஆனால் தனது மருமகளை அங்கு போட்டியிட வைக்க விரும்பினார் மாலா. இன்னொரு பக்கம் கதிரேஷ் மறைவுக்குப் பிறகு ரேகா தனியாக சுமார் 25 முதல் 30 பேர் கொண்ட அடியாள் கும்பலை உருவாக்கி வைத்திருந்தது மாலாவுக்கு பிடிக்கவில்லை. குடும்ப சண்டை மட்டுமல்லாது இது ஒரு கேங் வார் என்ற அளவுக்கு சென்றுள்ளது.

பெங்களூர் கேங் வார்
ரேகாவை கொன்றதாக கைது செய்யப்பட்டுள்ள லம்பு பீட்டர் (41), கதிரேஷிடம் நெருக்கமாக இருந்தவர். எனவே இயல்பாக மாலாவுக்கும் நம்பிக்கைக்குரியவராக இருந்துள்ளார். இந்த நிலையில், லம்பு பீட்டர் எடுத்த டெண்டரில் 16 லட்சம் பேமென்ட்டை நிறுத்தி வைத்துள்ளார் ரேகா.
குடித்து விட்டு ரேகா வீட்டுக்கே போய் இதுபற்றி கேட்டு கலாட்டா செய்துள்ளார் பீட்டர். அப்போது தனது செருப்பால் பீட்டரை அடித்துள்ளார் ரேகா. இவ்வாறு பல்வேறு காரணங்களால், ரேகா திட்டம் போட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பெங்களூரு நகரின் மையப்பகுதியில் கேங்வார் உருவாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் காரணமாக இருந்துள்ளனர். அதில் ஒருவர் கைதாகி சிறையில் உள்ளார், ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் கேங் வார் இன்னும் அதிகரிக்க கூடுமா என்ற சந்தேகத்தில் விசாரணையை என்னும் தீவிரப்படுத்தியுள்ளது காவல்துறை.












Click it and Unblock the Notifications