கீர்த்தி ஆசாத் சஸ்பெண்ட்.. அத்வானி உள்ளிட்ட பாஜக சீனியர் தலைவர்களின் திடீர் ஆலோசனையால் பரபரப்பு
டெல்லி: கிரிக்கெட் சங்க ஊழல் குறித்து அமைச்சர் அருண் ஜேட்லியை குற்றம்சாட்டிய எம்.பி கீர்த்தி ஆசாத் பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், அத்வானி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள், முரளி மனோகர் ஜோஷி வீட்டில் ஆலோசனை நடத்திவருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக மத்திய அமைச்சர், ஜேட்லி பதவி வகித்தபோது, பெரோஷா கோட்லா கிரிக்கெட் மைதான புனரமைப்புக்கு ரூ.24 கோடி மதிப்பிடப்பிடப்பட்டு, ரூ.114 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால் இதுதொடர்பாக ஒப்பந்தப்புள்ளியில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
ஒரு லேப்டாப்புக்கு ரூ.36 ஆயிரம் ஒரு நாள் வாடகையாக வழங்கப்பட்டுள்ளது. ஒரு பிரின்டருக்கு தினமும் ரூ.3,000க்கு வாடகை அளிக்கப்பட்டுள்ளது. அதில் பணி செய்ததாக காட்டப்பட்ட 14 நிறுவனங்கள் போலியானவை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, கிரிக்கெட் சங்க ஊழலில் மத்திய அமைச்சர் ஜேட்லிக்கு தொடர்பிருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். சிபிஐ தனது அலுவலகத்தில் சோதனை நடத்தியதற்கு பதிலடியாக கெஜ்ரிவால் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்நிலையில், கெஜ்ரிவாலுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் ஜேட்லி.
இதுகுறித்து டிவிட்டரில் பாஜக எம்.பி கீர்த்தி ஆசாத் கூறிய கருத்து ஒன்று ஜேட்லியை சாடுவதாக இருந்தது. அந்த டிவிட்டரில், ஜேட்லி டிவிட்டர் அக்கவுண்டையும் டேக் செய்து, அவரை ஆண்மையற்றவர் என்று கீர்த்தியின் டிவிட் சாடியிருந்தது.
இதையடுத்து பாஜகவில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக நேற்று அக்கட்சி அறிவித்தது. இதனால் அதி்ச்சியடைந்த கீர்த்தி பிரசாத், தனது டிவிட்டர் அக்கவுண்டை யாரோ ஹேக் செய்து அவ்வாறு டிவிட் போட்டுவிட்டதாக டிவிட்டர் மூலம் கருத்து தெரவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில், இதுகுறித்த விவாதம் வரும்போது, கீர்த்தி ஆசாத், சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்ஐடி) அமைத்து காலவரையறை நிர்ணயித்து இந்த ஊழல் பற்றி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
கீர்த்தி ஆசாத் இன்று அளித்த பேட்டியில், நான் என்ன தவறு செய்தேன் என்பதை பிரதமர் மோடி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கீர்த்தி போன்ற நேர்மையானவரை நாம் இழந்துவிட கூடாது என்று பாஜகவின், சுப்பிரமணியன் சுவாமி, கூறியுள்ளார்.
கீர்த்திக்கு, பாஜகவில் ஒரு குழு ஆதரவு தெரிவித்துவருவது கண்கூடாக தெரிய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், முரளி மனோகர் ஜோஷியின் டெல்லி வீட்டில், அத்வானி, சாந்த குமார் போன்ற மூத்த தலைவர்கள் இன்று மதியம் திடீர் ஆலோசனை நடத்தினர்.
கீர்த்தி ஆசாத் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. பாஜகவிற்குள் பிளவு உருவாகியிருப்பது, இந்த தனி மீட்டிங்கின்மூலம் உறுதியாகியுள்ளது.