பான் கார்டு விண்ணப்பத்தில் அம்மா பெயரை இணைக்கலாம் - டிச.5 முதல் புதிய முறை
பான் கார்டு விண்ணப்பத்தில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர் விரும்பினால், தாய் பெயரை பான் கார்டில் குறிப்பிடலாம்.
டெல்லி: பான் கார்டு விண்ணப்பத்தில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. பான் எண் விண்ணப்பிக்கும் நபரின் தந்தையை விட்டு தாய் பிரிந்து சென்று விட்டால், தந்தை பெயரைக் குறிப்பிடுவது கட்டாயமல்ல என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
இந்திய குடிமக்கள் அனைவருமே பான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். பான்கார்டு பெறுவதற்கு வயது வரம்பு தேவையில்லை. பிறந்த குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். வெளிநாடு வாழ் இந்தியர்களும் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் முகவரிச் சான்று, இருப்பிடச்சான்று, அடையாளச் சான்று விண்ணப்பத்துடன் 107 ரூபாய் செலுத்த வேண்டும்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள என்.எஸ்.டி.எல் அமைப்பு பான் எண் வழங்கும் சேவையை செய்து வருகிறது. வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய, பங்குகளை வாங்கி விற்பதற்கான டீமேட் அக்கவுண்ட் தொடங்க பான்கார்ட் அவசியம். வங்கியில் 50000 ரூபாய் டெபாசிட் செய்ய, பணம் எடுக்கவும் பான் கார்ட் அவசியம்.
இதன்மூலம் கடன், முதலீடு, பண மதிப்பு கொண்ட வாங்கி விற்கும் நடவடிக்கைகள், வங்கி பணபரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்தும் கண்காணிக்கப்படும்.
ஒருமுறை பான் எண் வழங்கப்பட்டால், மீண்டும் அதை மாற்ற இயலாது. இந்தியா முழுவதும் எங்கு சென்றாலும், பான் எண் மாறாது. அதையே பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சூழலில் பான் விண்ணப்பத்தில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி, விண்ணப்பிக்கும் நபரின் தந்தையை விட்டு தாய் பிரிந்து சென்று விட்டால், தந்தை பெயரைக் குறிப்பிடுவது கட்டாயமல்ல என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வருமான வரி விதிகளிலும் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒருவேளை விண்ணப்பிக்கும் நபர் விரும்பினால், தாய் பெயரைக் குறிப்பிடலாம். இந்த விதிமுறைகள் வரும் டிசம்பர் 5ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.