கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் வரிச்சலுகை- மத்திய அரசு நடவடிக்கை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ரூபாய் நோட்டு பயன்பாட்டை குறைப்பதற்காக கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு வருமான வரிச்சலுகை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கிரெடிட், டெபிட் கார்டு மூலமான பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தவும், ரூபாய் நோட்டு பரிவர்த்தனையை குறைக்கவும் மத்திய அரசு விரைவில் புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட் உரையில் தெரிவித்திருந்தார்.
இதன்படி ரூபாய் நோட்டு பயன்பாட்டை குறைப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ள புதிய நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுபற்றிய திட்ட வரைவை வெளியிட்டுள்ள மத்திய அரசு இது தொடர்பாக வரும் 29-ந் தேதிக்குள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளது.

இந்த திட்ட வரைவின் முக்கிய அம்சங்கள்:
- கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம் குறிப்பிட்ட அளவுக்கு பணம் செலுத்துபவர்களுக்கு வருமான வரிச்சலுகை அளிக்கப்படும்.
- பெட்ரோல் பங்க், கியாஸ் ஏஜென்சி ஆகியவற்றில் பணம் செலுத்த கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டை பயன்படுத்துபவர்களுக்கும், ரயில் டிக்கெட் எடுக்க இந்த கார்டுகளை பயன்படுத்துபவர்களுக்கும் பரிவர்த்தனை கட்டணம் கிடையாது.
- ஒரு லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகள் அனைத்தும் கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் மேற்கொள்வது கட்டாயம் ஆக்கப்படும்.
- வாடிக்கையாளர்களிடம் கிரெடிட், டெபிட் கார்டுகளை ஏற்றுக்கொண்டு பொருட்கள் வழங்கும் வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்களுக்கு வரி தள்ளுபடி அளிக்கப்படும். இதற்கு அவர்கள் தங்கள் வியாபாரத்தில் 50% மேல் கார்டுகள் மூலம் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்.
- அரசுத்துறைகள் தங்களது வரி, அபராதம் மற்றும் கட்டண வசூலுக்கு கார்டுகள் மூலம் பணம் செலுத்துவதை ஏற்கும் வசதியை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அந்த திட்ட வரைவில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications