ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பினால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு - ஐநாவில் சொன்ன இந்தியா
சரக்கு மற்றும் சேவை வரி, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பினால் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை மேலும் 18 லட்சம் பேர் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா கூறியுள்ளது.
நியூயார்க்: ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்க அறிவிப்பின் மூலம் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு ஐக்கிய நாடுகள் சபையில் அறிவித்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. புதிய 500,200, 50,10 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது.
நாட்டில் சரக்கு மற்றும் சேவைவரி நடைமுறைக்கு வந்தபின், மறைமுக வரி செலுத்துவோர் எண்ணிக்கை 50 சதவீதம், அதாவது, 34 லட்சம் வர்த்தகர்கள் புதிதாக இணைந்துள்ளனர். தமிழகத்தில் அதிக அளவு ஜிஎஸ்டியில் வர்த்தகர்கள் பதிவு செய்துள்ளனர் என கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் பேசிய வெளியுறவு விவகாரத்துறை கூடுதல் செயலர் ஏ.கிதேஷ் சர்மா இந்தத் தகவலைத் தெரிவித்தார். பல்வேறு சீர்திருத்தங்களை இந்தியா தொடர்ந்து செயல்படுத்திவருவதாகவும் அவர் கூறினார்.
காகித பணத்துக்கு பதிலாக டிஜிட்டல் முறைகளை ஊக்குவித்து வருவதோடு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் ஒரே சீரான முறையில் வரி வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி முறையைக் கொண்டுவந்துள்ளோம். ஜிஎஸ்டி நடைமுறையின் மூலம் மறைமுக வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகள் மூலம் மேலும் 18 லட்சம் மக்கள் வருமான வரி வரம்புக்குள் வந்திருக்கிறார்கள் என்று கிதேஷ் சர்மா கூறியுள்ளார்.
உலக வர்த்தகத்தின் அடிப்படை கொள்கைகளில் இந்தியா உறுதியாக இருக்கிறது. தோஹா மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள்படி நாடுகளுடனான கூட்டுறவு, விதிமுறைகள் சார்ந்து முடிவுகளை எடுப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.
வளர்ந்துவரும் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு விதமான அணுகுமுறை,பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சுதந்திரமான மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த அமைப்பு மற்றும் மேல்முறையீட்டு நடவடிக்கைகள், என இந்தியாவின் நிலைப்பாடு உறுதியாக இருப்பதாகவும் கிதேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் இந்தியா-ஐக்கிய நாடுகள் சபை மேம்பாட்டு கூட்டுறவின் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு உதவி வருகிறோம் எனவும் கிதேஷ் சர்மா கூறியுள்ளார்.