10 லட்சம் வங்கி ஊழியர்கள் நாளை மறுநாள் ஸ்டிரைக்
சென்னை: சம்பள திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள 10 லட்சம் வங்கி ஊழியர்கள் வரும் 18ம் தேதி அன்று ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
சம்பள திருத்தத்தை மேற்கொள்வது, வங்கித் துறை சீர்த்திருத்தங்களை நிறுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வங்கி ஊழியர்களின் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் அவர்களின் கோரிக்கைகள் குறித்து வங்கி ஊழியர்களின் சங்கங்களுக்கும், வங்கி அமைப்புகளுக்கும் இடையே கடந்த சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாததால் தோல்வி அடைந்தது. இதையடுத்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 18ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்த வங்கி ஊழியர்கள் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. இந்த வேலை நிறுத்தத்தில் 10 லட்சம் ஊழியர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
இது குறித்து அகில இந்திய வங்கிகள் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.ஹெச். வெங்கடாச்சலம் கூறுகையில்,
பேச்சுவார்த்தையில் நல்ல தீர்வு கிடைக்காததால் தான் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவிருக்கிறோம். கடந்த ஒரு ஆண்டு காலமாக சம்பள திருத்தம் செய்யப்படாமல் உள்ளது. அதை தான் உடனே செய்யுமாறு சங்கங்கள் கேட்கின்றன. வங்கிகளை தனியார் மயமாக்குதல் உள்ளிட்ட சீர்திருத்தங்களுக்கு சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்றார்.