பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வாங்க- அரவிந்த் சுப்ரமணியன்
பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டுவந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் விலை நிச்சயமாக குறைய வாய்ப்புள்ளது.
டெல்லி: பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவந்தால் மட்டுமே இவ்விரண்டின் விலை உயர்வை கட்டுக்கொள் கொண்டுவரமுடியும் என்று தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ஆலோசனை தெரிவித்தார்.
2018-19ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னோட்டமாக ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக நடைபெறும் நிகழ்வாக பொருளாதார ஆய்வறிக்கை கடந்த திங்களன்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. அதில் நடப்பு ஆண்டில் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது 6.75 சதவிகிதத்தை தொடும் என்றும், வரும் 2018-19ம் நிதி ஆண்டில் 7 சதவிகிதம் முதல் 7.75 சதவிகிதத்தை எட்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த இரண்டு வரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட உலக வங்கியின் அறிக்கையில் நடப்பு ஆண்டில் பொருளாதார வளர்ச்சியானது 6.80 சதவிகிமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே 2018-19ம் நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சியானது 7.30 சதவிகிமாக உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொழில் துறையில் உற்பத்தி
உயர் பண மதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி விதிப்பின் தாக்கத்தால் நடப்பு ஆண்டின் பொருளாதார வளர்ச்சி சற்று தேக்கமடைந்தாலும் வரும் 2018-19ம் நிதி ஆண்டில் ஜிஎஸ்டி வரி விதிப்பின் மூலம் தொழில் துறையில் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் இதன் தொடர்ச்சியாக மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர வாய்ப்புள்ளது என்றும் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிடிபி அதிகரிப்பு
வரும் 2018-19ம் நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதம் முதல் 7.75 வரையில் எட்டக்கூடும் என்றாலும், இந்த மேஜிக் எண்ணை எட்டுவதற்கு பெரும் தடைக் கல்லாக இருப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தான். இதற்கு ஒரே தீர்வு பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வருவதுதான். இவ்விரண்டையும் ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டுவந்தால் பெட்ரோல், டீசல் விலை கணிசமாகக் குறையக் கூடும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
பொருளாதார ஆய்வறிக்கையை திங்கள் கிழமையன்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட பின்பு, பத்திரிக்கையாளரகளுக்கு பேட்டியளித்த தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், கடந்த வாரத்தில் பெட்ரோல் டீசல் விலையானது தலைநகர் டெல்லியில், மூன்று ஆண்டு உச்ச விலையான 72.49 ரூபாயை தொட்டது. பெட்ரோல், டீசல் இரண்டும் வாட் வரி வரம்பிற்குள் இருப்பதே இந்த விலை உயர்வுக்கு காரணம் என்றார்.
விலை குறையும்
பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டுவந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் விலை நிச்சயமாக குறைய வாய்ப்புள்ளது. கடந்த 2016-17ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான மூன்று காலாண்டில் கச்சா எண்ணை விலையானது அமெரிக்க டாலர் விலையில் சுமார் 16 சதவிகிதம்அதிகரித்துள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி
சர்வதேச கச்சா எண்ணை சந்தையில் ஒரு பேரலுக்கு பத்து அமெரிக்க டாலர் விலை உயரும்போதும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து, நம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அது எதிரொலித்து சுமார் 0.3 சதவிகிதம் வரையிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் சுமார் 63000 கோடி ரூபாய் வரையிலும் நடப்பு கணக்கில் பற்றாக்குறையை (Current Account Deficit) ஏற்படுத்தும்,
ஜிஎஸ்டி வரி
இந்த பற்றாக்குறையை கட்டுப்படுத்த ஒரே வழி, பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டுவருவதுதான். இதனால். ஆரம்பத்தில் மாநிலங்களுக்கு வரவேண்டிய வரி வருவாய் நின்றுபோகும். மத்திய அரசு அனைத்து மாநிலங்களுடனும் கலந்து பேசி சுமூக தீர்வு காணவேண்டும்.
மின்துறையில் ஜிஎஸ்டி
தற்போது, ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் பல அடுக்குக வரி விகிதங்கள் உள்ளன. இவற்றை எளிமையாகவும் பகுத்தாய்வு செய்தும் முறைப்படுத்தி கூடிய விரைவில் ஒரே வரி விதிமுறையாக நாம் ஒன்றிணைக்க வேண்டியது அவசியமாகும் அதுபோலவே, மின்துறை, கட்டுமானத்துறை ஆகியவற்றையும் ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டுவரப்படுமானால், அதுவும் பெட்ரோல், டீசல் விலை குறைய தூண்டுகோலாக இருக்கக்கூடும். என்று நம்பிக்கை தெரிவித்தார்.