ரெபோ ரேட்டை 25 புள்ளிகள் உயர்த்திய ரிசர்வ் வங்கி!- லோன் கஷ்டமாகும்!
மும்பை: ரிசர்வ் வங்கி, பிற வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டியை 25 புள்ளிகள் (0.25 சதவீதம்) உயர்த்தியுள்ளது.
மும்பையில் நடந்த ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை மீதான மறு ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கத்தைக் கணக்கில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான வட்டி, 7.75 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால், வங்கிகள் அளிக்கும் கடன்களுக்கான வட்டியும் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
வங்கிகளின் நிதியிருப்பு விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. இதனால், கையிருப்பு விகிதம் (CRR) 4 சதவீதமாகவே நீடிக்கும்.
பங்குச் சந்தையில் நேற்றும் இன்றும் கடுமையான வீழ்ச்சி நிலவும் சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதால், வங்கிகள் பங்குகள் மேலும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.
இந்த அறிவிப்பால் நீங்கள் வங்கிகளில் வாங்கும் பர்சனல் லோல், வீட்டு லோன், கார் லோன், பைக் லோனுக்கான வட்டி அதிகமாகும்.