கட்டண உயர்வு பீதியால், ரயில்வே சீசன் டிக்கெட் எடுக்க முண்டியடித்த மக்கள்
ரயில் கட்டணங்களை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. 25ம்தேதி முதல் இந்த புதிய, கட்டணம் அமலுக்கு வருகிறது. மும்பை சப்-அர்பன் ரயில் கட்டணங்கள் தாறுமாறாக ஏறியுள்ளன. சீசன் டிக்கெட் இரு மடங்கு விலையேற்றம் கண்டுள்ளது. எனவே இன்றும், நேற்றும் சீசன் டிக்கெட்டுகளை எடுக்க ரயில் நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் நின்றனர்.
ஆறு மாதம், ஒரு வருடத்துக்கான சீசன் டிக்கெட்டுகளை எடுக்க நீண்ட கியூ காணப்பட்டது. இன்று ஒரே நாளில் மேற்கு ரயில்வே 50 ஆயிரம் பேருக்கு சீசன் டிக்கெட்டுகளை வழங்கியுள்ளதாம். கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் மும்பையில் 1,450 பேர் ஆண்டு சீசன் டிக்கெட் வாங்கியுள்ளனர். அரையாண்டுக்கு சீசன் டிக்கெட் எடுத்தோர் எண்ணிக்கை 1650. ஆண்டு முழுமைக்குமான சீசன் டிக்கெட்டால், அன்றையதினம் ரூ.46 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. அதற்கு ஒருநாள் முன்பாக இது ரூ.26 ஆயிரம் மட்டுமே.
அதுபோல, நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.95 ஆயிரம் மதிப்புக்கு, அரையாண்டு சீசன் பாஸ் விற்பனையாகிவந்த நிலையில், சனிக்கிழமை மட்டும் இதன் மதிப்பு ரூ.22 லட்சமாக உயர்ந்துள்ளது என்று ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையிலும் சீசன் டிக்கெட் எடுக்க பயணிகள் முட்டி மோதியுள்ளனர். ஆனால் இப்போதே சீசன் டிக்கெட் எடுத்தாலும், 25ம் தேதிக்கு பிறகு கூடுதல் கட்டணத்தை டிக்கெட் பரிசோதகரிடமோ அல்லது கவுண்டர்களிலோ செலுத்த வேண்டும் என்று அறிவித்தது மக்களுக்கு தெரியாமல் உள்ளது.