ரேஷன் சர்க்கரை மானியம் ரத்தாக வாய்ப்பு - அச்சத்தில் ஏழை மக்கள்!
2017-18 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டில் சர்க்கரை மானிய திட்டத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் மத்திய அரசுக்கு 4,500 கோடி ரூபாய் மிச்சமாகும் எனத் தெரிகிறது.
டெல்லி: வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு குறைந்த விலையில் சர்க்கரை கிடைக்க வேண்டும் என்பதற்காக, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. அதன்படி, பொதுச் சந்தையிலிருந்து சர்க்கரை கொள்முதல் செய்து, ரேஷன் கார்டுகள் மூலம் சலுகை விலையில் ஒரு கிலோ சர்க்கரை ரூபாய் 13.50க்கு மாநில அரசுகள் வழங்கி வருகிறது. அதற்காக, கிலோ ஒன்றுக்கு ரூபாய் 18.50 வீதம் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது.
நாடு முழுவதும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் 40% மக்கள் இந்தத் திட்டத்தின் மூலம் மானியவிலையில் சர்க்கரை பெற்று வருகின்றனர். இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில், இந்த சர்க்கரை மானிய திட்டத்தைக் கைவிட முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் சர்க்கரைக்கான மானியத்தை மத்திய அரசு நிறுத்துவதால், சர்க்கரை விற்பனை நிறுத்தப்படும் என்னும் அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
ரேசன்கடைகள்
தமிழகத்தில் இயங்கும் 33,973 ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி, குறைந்த விலையில் சர்க்கரை, கோதுமை, பாமாயில், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, டீ தூள், உப்பு, சோப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்படுகின்றன. நாடு முழுவதும் பெரும்பாலான குடும்பங்கள் ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்களையே நம்பியுள்ளன.
சர்க்கரை மானியம்
கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மலிவு விலையில் சர்க்கரை கிடைக்கச் செய்வதற்காக, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது.
40 கோடி மக்கள் பயன்
சர்க்கரை மானியத் திட்டத்தின்படி, பொதுச் சந்தையிலிருந்து சர்க்கரை கொள்முதல் செய்து, நியாய விலைக் கடைகள் மூலம் அதை கிலோ ரூ.13.50 என்ற மானிய விலையில் மாநில அரசுகள் விற்பனை செய்து வருகின்றன. அதற்காக, கிலோ ஒன்றுக்கு ரூ.18.50 வீதம் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு மானியத் தொகை வழங்கி வருகிறது. வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் 40 கோடி பேர் பலன் பெறும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மானியம் ரத்தாக வாய்ப்பு
இந்த நிலையில், மத்திய அரசு பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யவிருக்கும் புதிய பட்ஜெட்டில், இந்த சர்க்கரை மானியத் திட்டத்தைக் கைவிட முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2017-18 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டில் சர்க்கரை மானிய திட்டத்தை நிறுத்தினால் மத்திய அரசுக்கு 4,500 கோடி ரூபாய் மிச்சமாகும் எனத் தெரிகிறது.
பாதிப்பு யாருக்கு?
இலவச அரிசி ரத்தாகும் என்னும் செய்திக்குப் பிறகு இப்போது சர்க்கரையும் ரத்தாகும் என செய்தி வெளியாகியுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது நிறுத்தப்பட்டால் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ராம்விலாஸ் பஸ்வான்
இந்நிலையில், இந்தத் திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டாம். ‘அந்த்யோத்யா அன்ன யோஜனா' திட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள, வறுமையில் வாடும் குடும்பங்களுக்காவது அந்தத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என, உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஜெட்லி பரிசீலிப்பாரா? பட்ஜெட்டில் தெரியவரும்.