தாடி குறித்து கிண்டல்! சீக்கியர்களை புண்படுத்தியதாக காமெடி பிரபலம் மீது பாய்ந்த வழக்கு நடந்தது என்ன?
சண்டிகர்: பஞ்சாப்பில் தாடி குறித்து கிண்டல் செய்த காமெடி பிரபலம் பாரதிசிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சீக்கியர்களை புண்படுத்தியதாக கொடுத்த புகாரில் அவர் மீது வழக்கு பாய்ந்தது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியை சேர்ந்தவர் பாரதி சிங். இவர் தொலைக்காட்சிகளில் காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். நகைச்சுவை கூறி மக்களை சிரிக்க வைத்து வருகிறார்.
இந்நிலையில் தான் இவரது நகைச்சுவை தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதற்கு ஏராளமானவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இது சும்மா ட்ரெய்லர் தான்! நாளைக்கு பாருங்க எங்க கூட்டத்தை! பஞ்சாப் அரசை கதிகலங்க வைத்த விவசாயிகள்.!
தாடி பற்றி காமெடி
அதாவது அந்த வீடியோவில், பாரதி சிங் பேசுகையில்,‛‛தாடி, மீசை இருப்பது என்பது அதிக நன்மையை தரும். பால் குடிக்கிறீர்கள் என்றால் அதோடு தாடியை வாயில் போட்டு கொள்வதன் மூலம் சர்க்கரைக்கு நிகரான இனிப்பு சுவையை அதிகரிக்கும்'' என்பது போன்று தெரிவித்து இருந்தார். மேலும் தாடியிலும் பேன் வசிக்கும் என அவர் தெரிவித்து இருந்தார்.
போராட்டம்
இந்த வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவியது. இதற்கு சீக்கிய மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களை அவமதிக்கும் வகையில் பாரதி சிங் கூறியிருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் பாரதி சிங்கிற்கு எதிராக அவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் சீக்கியர்களின் உணர்வை புண்படுத்தியதாகவும், பாரதி சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
வீடியோவில் மன்னிப்பு
இதையடுத்து பாரதி சிங் வீடியோ ஒன்றை வெளியிட்டு மன்னிப்பு கோரியுள்ளார். அதில் ‛‛தற்போது பரவும் வீடியோவில் உள்நோக்கத்துடன் நான் எதுவும் பேசவில்லை. மதம் அல்லது ஜாதியை குறிப்பிட்டு பேச வேண்டும் என நான் எதையும் செய்யவில்லை. எனது தோழியுடன் காமெடியாக பேசியது தான். இது யாரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல. யாரும் புண்பட்டு இருந்தால் அவர்களிடம் கைக்கூப்பி மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்'' என்றார்.
போலீசில் வழக்குப்பதிவு
இருப்பினும் இதுதொடர்பாக சிரோமணி குருத்வாரா பர்பந்தாக் கமிட்டி சார்பில் ஜலாந்தரில் உள்ள ஆதாம்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரில் சீக்கிய மக்களின் உணர்வை புண்புடுத்தும் வகையில் பாரதி சிங் பேசியதாக கூறப்பட்டு இருந்தது. அதனடிப்படையில் போலீசார் அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 295ஏ பிரிவில் (வேண்டுமென்றே மத உணர்வுகளை சீர்குலைக்கும் நோக்கம்) வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.