புரியலையே.. ஆம் ஆத்மி முதல்வர் பகவந்த் மானை புகழும் காங்கிரஸ் சித்து! காரணம் என்னவா இருக்கும்?
சண்டிகர்: பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி முதல்வர் பகவந்த் மானை, அம்மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து புகழ்ந்துள்ளார். மாபியா கும்பலுக்கு எதிராக செயல்பட்டு மறுமலர்ச்சியை ஏற்படுத்துவார் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த புகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியினர் விடை தெரியாமல் விழிக்கின்றனர்.
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் வெறும் 18 தொகுதிகளிலும், எஸ்ஏடி 3, பாஜக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
இதன்மூலம் காங்கிரஸை வீழ்த்தி, ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப்பில் புதிதாக ஆட்சி அமைத்துள்ளது. பகவந்த் மான் புதிய முதல்வராக பொறுப்பு ஏற்றுள்ளார்.
புதிய அரசு வெற்றியடைய வேண்டும்! பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு ஸ்டாலின் வாழ்த்து!
சித்துவின் புகழ்ச்சி
இந்நிலையில் மாநிலத்தில் தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை நவ்ஜோத் சிங் சித்து நேற்று ராஜினாமா செய்தார். இதன் தொடர்ச்சியாக இன்று அவர் ஆம் ஆத்மி முதல்வர் பகவந்த் மானை புகழ்ந்து பேசியுள்ளார். இதுகுறித்து சித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ‛‛யாரிடமிருந்து எதையும் எதிர்பார்க்காத மகிழ்ச்சியான மனிதர். பஞ்சாப்பில் மக்களின் எதிர்ப்பார்ப்பையும் தாண்டி மாபியாக்களை எதிர்ப்பதை அவர் வரிவுப்படுத்துவார். இதன்மூலம் அவர் பஞ்சாப்பை மறுமலர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வார். மக்களுக்கான கொள்கைகள், மக்களுடன் சேர்ந்த அரசியலை முன்னெடுப்பார் என நம்புகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கு முன் வாழ்த்து
முன்னதாக ‛‛பஞ்சாப்பில் புதிய அரசியல் முறையை கொண்டு வரும் பொதுமக்களின் சிறந்த முடிவுக்கு வாழ்த்துக்கள்'' என நவ்ஜோத் சிங் சித்து கூறியிருந்தார். மேலும் காங்கிரஸ் தலைவராக இருந்து கொண்டு இப்படி கூறுகிறீர்களே என கேட்டதற்கு, ‛‛ இதில் தவறு எதுவும் இல்லை. மக்களின் முடிவு எப்போதும் தவறாக இருக்காது. மக்களின் முடிவு என்பது கடவுளின் முடிவாகும். இதை நாம் புரிந்து கொண்டு தலைவணங்கி ஏற்று கொள்ள வேண்டும்'' என்று பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.
காரணம் தெரியாமல் விழிப்பு
பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தாலும் கூட நவ்ஜோத் சிங் அதுபற்றி எந்த கவலையும் இன்றி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் முதலில் பஞ்சாப் ஆட்சி மாற்றம் செய்த மக்களின் முடிவு சிறந்தது என அவர் கூறிய நிலையில் தற்போது ஆம் ஆத்மி முதல்வர் பகவந்த் மானை புகழ்ந்துள்ளார். இவரது இந்த நடவடிக்கையின் பின்னால் உள்ள காரணம் என்னவென்று தெரியாமல் காங்கிரஸ் கட்சியினர் விழித்து வருகின்றனர்.
பரிதாப நிலை
பஞ்சாப் தேர்தலை பொறுத்தமட்டில் நவ்ஜோத் சிங் முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் மேலிடம் அறிவிக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் கட்சி மேலிடம் அப்போதைய முதல்வர் சரண்ஜித் சன்னியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது. இதனால் நவ்ஜோத் சிங் அதிருப்தி அடைந்தார். அவருக்கும், சரண்ஜித் சிங் சன்னிக்கு இடையே மறைமுகமாக அதிருப்தி இருந்தன. இது அப்படியே தேர்தலில் எதிரொலிக்க பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது. அத்துடன் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட நவ்ஜோத் சிங் சித்துவும், சாம்கவுர் சாஹிப், பதார் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்ட சரண்ஜித் சிங் சன்னியும் தோல்வியடைந்தனர். வெறும் 18 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று பரிதாபமான நிலைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.