கைதான ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ.2லட்சம்! ஒரே ஒரு ட்வீட் போட்ட முதல்வர்.. கதிகலங்கும் பாஜக
83 விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என பஞ்சாப் மாநிலம் அறிவித்துள்ளது
சண்டிகர்: டெல்லியில் கடந்த ஜனவரி 26-ம் தேதி நடந்த குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணி சென்று போராட்டத்தில் ஈடுபட்ட 83 விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று பஞ்சாப் மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்ததில் இருந்தே, விவசாயிகள் கடுமையான அதிருப்தியில் உள்ளனர். இந்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று கோரி, கிட்டத்தட்ட 2 வருடங்களாகவே கோரிக்கை வைத்து பலவித போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் விவசாயிகள், வேளாண் அமைப்புகள், விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்...

பேரணி
இதில் கடந்த ஜனவரி 26-ம் தேதி நடந்த குடியரசு தினத்தின்போது, விவசாயிகள் டிராக்டரில் டெல்லிக்குள் ஊர்வலமாக வரவும், பேரணியை நடத்தவும் டெல்லி போலீஸார் அப்போது அனுமதி அளித்திருந்தனர். இதையடுத்து, விவசாயிகளும் பேரணியாக திரண்டு வந்தனர்.. ஆரம்பத்தில் அமைதியாகவே நடந்து வந்த பேரணி, திடீரென மோதலாக உருவெடுத்தது.. டெல்லி செங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீஸாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.. வன்முறை வெடித்தது..

செங்கோட்டை
இதில் டெல்லி செங்கோட்டையில் நுழைந்த விவசாயிகள் அமைப்பினர், தேசிய கொடி ஏற்றும் இடத்தில் தங்களின் கொடியை ஏற்றினர்... அதுமட்டுமல்லாமல், வேளாண் சட்டங்களை திரும்ப பெறும்வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்றும் உறுதியாகவும், திடமாகவும் அறிவித்தனர்.. இப்போதுவரை இந்த போராட்டத்தில் இருந்து விவசாயிகள் பின்வாங்கவில்லை.. எத்தனையோ முறை விவசாய அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை..

கொந்தளிப்பு
இதனிடையே சில மாநிலங்களில் சட்டமன்ற, இடைத்தேர்தல்களும் நடந்து முடிந்துவிட்டன. பஞ்சாப், மேற்கு வங்கம், உபி உட்பட பல்வேறு மாநிலங்களில், விவசாயிகள் கொந்தளிப்பில் உள்ளனர்.. ஆனால் விவசாயிகளின் கோரிக்கைக்கு, மத்திய அரசு தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை.. நடந்து முடிந்த 13 மாநிலங்களின் தேர்தல்களில் பாஜக மிகப்பெரிய சறுக்கலையும், பின்னடைவையும் சந்தித்துள்ளது.. இது பாஜகவுக்கே கொஞ்சம் ஷாக்தான்.. இனி அடுத்தடுத்த தேர்தல்கள் வர உள்ள நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்குமா? அல்லது அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியை பாஜக மேலிடம் மேற்கொள்ளுமா என்று தெரியவில்லை..

அதிரடி அறிவிப்பு
ஆனால், பஞ்சாப் மாநில அரசு, விவசாயிகளின் பக்கம் இன்றுவரை உறுதியாக நின்று வருகிறது. வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் எப்போதுமே இருப்போம் என்றும் அம்மாநில அரசு சொல்லி வருகிறது.. அதுமட்டுமல்ல, இப்போது புது அறிவிப்பு ஒன்றையும் விடுத்துள்ளது.. அதாவது, குடியரசு தினத்தன்று போராட்டத்தில் ஈடுபட்டுக் கைதான 83 விவசாயிகளுக்கு இழப்பீட்டை அறிவித்துள்ளது காங்கிரஸ் அரசு.

2 லட்சம் ரூபாய்
பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. இதுகுறித்து ஒரு ட்வீட்டும் பதிவிட்டுள்ளார்.. அதில், "வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக எனது அரசு இருக்கிறது என்பதை உறுதி செய்துகொள்கிறேன்... கடந்த ஜனவரி 26-ம் தேதி டெல்லியில் நடந்த பேரணியில் போலீஸாரால் கைது செய்யப்பட்ட 83 விவசாயிகளுக்கு இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார். காங்கிரஸின் இந்த அறிவிப்பு, பாஜக மேலிடத்துக்கு மேலும் எரிச்சலையும், டென்ஷனையும் கிளப்பி விட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications