'இதுதான் இந்தியா'.. முஸ்லிம்கள் தொழுகை செய்வதற்காக 5 குருத்வாராக்களை வழங்கிய சீக்கியர்கள்.. செம!
சண்டிகர்: ஹரியானா மாநிலம் குர்கான் நகரில் போதிய அளவில் மசூதிகள் இல்லாததால் முஸ்லிம்கள் ஜும்ஆ தொழுகையை அல்லது நமாஸை திறந்த வெளியில் செய்து வருகின்றனர். ஆனால் முஸ்லிம்கள் பொது வெளியில் தொழுகை செய்வதற்கு சில இந்துத்வா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
4 மாவட்டங்களுக்கு அதி கனமழை.... இதெல்லாம் கைவசம் வைத்துக்கொள்வது அவசியம் மக்களே
கடந்த வாரமா குர்கானின் செக்டார் 12 A என்ற முஸ்லிம்கள் வழக்கமாக தொழுகை செய்யும் இடத்தை முற்றுகையிட்ட ஸன்யுக்தா இந்து சங்கர்ஷ் சமிதியுடன் இணைந்த ஒரு குழு இந்த இடத்தில் கைப்பந்து மைதானம் அமைப்பதாக கூறி எதிரிப்பு தெரிவித்தது.
முஸ்லிம்கள் தொழுகைக்கு எதிர்ப்பு
மற்றொரு குழு சர்ஹவுலில் ஒரு பூங்காவை ஆக்கிரமித்து முஸ்லீம்களை வேறு இடங்களில் பிரார்த்தனை செய்ய கட்டாயப்படுத்தியது. இவ்வாறு பல இடங்களில் முஸ்லிம்கள் தொழுகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் குர்கானில் ஹரியானா மாவட்டத்தின் டெல்லி எல்லையில் உள்ள ஐந்து குருத்வாராக்களை முஸ்லிம்கள் தொழுகை செய்வதற்காக சீக்கிய குழு வழங்கியுள்ளது. அதாவது குர்கானில் உள்ள சதார் பஜார், செக்டார் 39, செக்டார் 46, மாடல் டவுன் மற்றும் ஜகோபுரா ஆகிய 5 குருத்வாராக்களில் உள்ள காலியிடங்களை தொழுகைக்காக முஸ்லிம்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
சீக்கியர்களின் மனது
குர்கானில் உள்ள குருத்வாரா ஸ்ரீ குரு சிங் சபாவின் தலைவர் ஷெர்தில் சிங் சித்து இது தொடர்பாக கூறுகையில், 'குருத்வாரா என்பது குருவின் வீடு. அனைத்து சமுதாய மக்களும் இங்கு வந்து பிரார்த்தனை செய்ய வரவேற்கப்படுகிறார்கள். முஸ்லீம் சமூகம் நியமிக்கப்பட்ட இடங்களில் பிரார்த்தனை செய்வதில் சிக்கல்களை எதிர்கொண்டால், அவர்கள் குருத்வாராக்களில் பிரார்த்தனை செய்யலாம். குருத்வாராக்களின் கதவுகள் அனைவருக்கும் திறந்திருக்கும்' என்று கூறியுளளார்.
2,000 பேர் தங்க முடியும்
''எங்கள் முதல் குருவின் (குரு நானக் தேவ்) பிறந்த நாளை வெள்ளிக்கிழமை கொண்டாடுகிறோம். இந்த குருத்வாராக்களில் 2,000 பேர் தங்க முடியும், ஆனால் 30-40 பேர் கொண்ட சிறிய தொகுதிகளில் மக்கள் பிரார்த்தனை செய்யவும், கொரோனா காரணமாக சமூக இடைவெளியை பின்பற்றவும் நாங்கள் வலியுறுத்தி உள்ளோம்'' என்றும் ஷெர்தில் சிங் சித்து தெரிவித்துள்ளார்.
சகோதரத்துவத்திற்கு எடுத்துக்காட்டு
இதனை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ள குர்கானில் உள்ள ஜமியத் உலமாவின் தலைவரான முஃப்தி முகமது சலீம், '' இந்த வாய்ப்[பு மிகவும் அருமையானது. "இது மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கை. கடந்த இரண்டு மாதங்களாக குர்கானில் வெறுப்பு மற்றும் வகுப்புவாத நல்லிணக்கத்தை பரப்பி வரும் பிளவுபடுத்தும் சக்திகளை தோற்கடிக்க பல மதங்களைச் சேர்ந்தவர்கள் முன்வந்துள்ள சகோதரத்துவத்திற்கு இது ஒரு உண்மையான எடுத்துக்காட்டு. இந்த வெள்ளிக்கிழமை செக்டார் 39 மற்றும் சதர் பஜாரில் நமாஸ் செய்ய முடிவு செய்துள்ளோம்'' என்று கூறியுள்ளார்.