அதிர்ச்சியில் மத்திய அரசு! மீண்டும் போராட்டத்துக்கு தயாராகும் பஞ்சாப் விவசாயிகள்... ஏன்?
சண்டிகர் : பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை உயர்த்த இருப்பதாக அறிவித்த மத்திய அரசை கண்டித்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் பஞ்சாப் மாநில விவசாயிகள் அறிவித்து உள்ளனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஓராண்டுக்கும் மேலாக இடைவிடாத போராட்டங்களை நடத்தி தலைநகர் டெல்லியையே முடக்கிப்போட்ட விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவான சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அமைப்பு புதிய போராட்டத்தை கையில் எடுக்க உள்ளது.
அண்மையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் பஞ்சாபில் வாகனங்களுக்கான சுங்கக்கட்டணம் ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து 10 முதல் 18 சதவீதம் வரை உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் விவசாயிகள் கொந்தளிப்பு
பெட்ரோல், டீசல் விலையேற்றம் காரணமாக பொதுமக்கள், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் சுங்கச்சாவடி கட்டண உயர்வு பஞ்சாப் மாநில விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டத்தை அம்மாநில விவசாயிகள் கையில் எடுக்க உள்ளனர்.

அடுத்தக்கட்ட போராட்டம் நடத்த திட்டம்
இதுகுறித்து தெரிவித்துள்ள சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அமைப்பின் மூத்த தலைவர் ஹரிந்ர் சிங் லகோவால், "விரைவில் பல்வேறு சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட இருக்கிறது என்ற தகவல் எங்களுக்கு கிடைத்து இருக்கிறது. எனவே சம்யுக்தா கிஷான் மோர்ச்சாவில் இருக்கும் விவசாய சங்கங்கள் ஒன்றுகூடி பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு அடுத்தக்கட்ட போராட்டங்களை தொடங்குவது குறித்து முடிவெடுக்க இருக்கிறோம்.

விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்த திட்டம்
பொதுமக்கள் ஏற்கனவே விலைவாசி உயர்வு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இத்தகைய சூழலில் சங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படுவதை எங்களால் சகித்துக்கொள்ள முடியாது." என்றார்.
"பெட்ரோல், டீசல் விலையும் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. சுங்கக் கட்டண உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயரும் என்பதை நாம் மறக்கக் கூடாது. இதுபற்றி ஆலோசிக்க விரைவில் ஒரு கூட்டம் நடத்த இருக்கிறோம்." எனக் கூறுகிறார் சம்யுக்தா கிஷான் மோர்ச்சாவின் மற்றொரு தலைவரான தர்ஷன் பால்.

மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை
இதுகுறித்து கிர்தி விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவர் தேவிந்தர் பூனியா தெரிவிக்கையில், "வேளாண் சட்டங்களை கண்டித்து சுங்கச்சாவடிகளில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை பழிவாங்குவதற்காகவே பஞ்சாப் மற்றும் அரியானாவில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து நாங்கள் நிச்சயம் போராடுவோம்." என்றார்.












Click it and Unblock the Notifications