எவ்வளவோ செய்து விட்டார் முதல்வர்.. கையோடு இந்த கோரிக்கையையும் நிறைவேற்றலாமே
சென்னை: 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்த கூட்டமைப்பினர் வைத்துள்ளனர்.
இன்றைய தினம் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதில் இடைக்கால பட்ஜெட் குறித்த ஆலோசனைகள் நடத்தப்படவுள்ளன. மேலும் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய சிறப்பம்சங்கள் குறித்தும் ஆலோசனைகள் நடத்தப்படவுள்ளன.
இந்த நிலையில் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் தங்கள் கூட்டமைப்பு சார்பில் ஒரு கோரிக்கையை முன் வைத்துள்ளார். அதில் 2012-ஆம் ஆண்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் 16500 பகுதிநேர ஆசிரியர்களை 5ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமித்தார்.
4 ஆயிரம் காலியிடங்கள்
இதில் 4 ஆயிரம் காலியிடங்கள் ஏற்பட்டு தற்போது 12ஆயிரம் ஆசிரியர்களே உள்ளனர். 2017 ஆம் ஆண்டு முதல்
ரூ.7700 சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. இதனை 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2300 ரூபாய் உயர்த்தி இனி ரூபாய் 10ஆயிரமாக வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
10 ஆண்டுகள்
இதனால் 12500 பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க மாதம் ஒன்றுக்கு இனி 12 கோடி செலவாகும். இதனை இன்னொரு மடங்கு உயர்த்தி கொடுத்து எங்களை நிரந்தரம் செய்ய அமைச்சரவை கொள்கை முடிவை அறிவிக்க வேண்டுகிறோம். இவ்வேலைக்கு சேர்ந்து 10 கல்வி ஆண்டுகள் ஆகின்றன.
3 அரை நாட்கள்
எனவே இப்போது நடைமுறையில் இருக்கும் வாரம் 3 அரைநாட்கள் என மாதம் 12 அரைநாட்கள் பணிபுரிவதை, இனி அனைத்து வேலைநாட்களிலும் முழுநேரமும் பணியை நீட்டிக்க வேண்டும். எங்களை முன்னேற்ற அரசு நடவடிக்க எடுக்க வேண்டும்.எங்களின் குடும்பங்கள் மேம்பட காலமுறை ஊதியத்திற்கு மாற்ற வேண்டும்.
இடைக்கால பட்ஜெட்
2017 ஆம் ஆண்டே சட்டசபையில் கல்விஅமைச்சர் செங்கோட்டையன் வாக்குறுதியின்படி பகுதிநேர ஆசிரியர்களை எப்போதோ நிரந்தரம் செய்து இருக்க வேண்டும். விரைவில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கு முன்பே இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது.
10 கோடி போதும்
எனவே 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யும் மாபெரும் அறிவிப்பை இந்த அரசு செய்திட வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாகும். இதற்காக அரசு தாயுள்ளத்துடன் மாதம் ஒன்றுக்கு மேலும் 10 கோடி நிதி ஒதுக்கினாலே போதும். இதை செய்ய அரசு மனசு வைத்தால் போதும்.
கோரிக்கை
ஒவ்வொரு சமயத்திலும் புதிது புதிதாக வெவ்வேறு பிரச்சனைகள் உருவாகி வருகின்றன. இப்போது செய்யாமல் வேறு எப்போது செய்ய முடியும். எங்களின் நீண்ட கால கோரிக்கைக்கு ஒரு முடிவு எடுங்கள் என தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. விவசாய கடன்கள் தள்ளுபடி, 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் உள்ளிட்ட எத்தனையோ திட்டங்களை செயல்படுத்திய முதல்வர் இதையும் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.