2 நாள் முன் நள்ளிரவில் சித்திரவதை.. இன்று 14 தமிழக மீனவர்கள் கைது! தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்
சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழ்நாட்டை சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றுள்ள சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று சுமார் 1500க்கும் அதிகமான மீனவர்கள் 400 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ராமேஸ்வரத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இந்த நிலையில் இலங்கையின் நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது அங்கு இலங்கை கடற்படையினர் வந்து இருக்கின்றனர்.

தமிழக மீனவர்கள் கைது
அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய இலங்கை கடற்படை 14 தமிழக மீனவர்களை கைது செய்து ஒரு விசைப்படகையும் கைப்பற்றி இருக்கிறது. கைதான மீனவர்கள் காரைநகர் கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். விசாரணைக்கு பின் மீண்டவர்கள் அந்நாட்டு மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தொடரும் அத்துமீறல்
மீனவர்கள் மீதான குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அவர்கள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசாலும், இந்திய அரசாலும் பல முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டும், இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் குறையவில்லை. வாரத்திற்கு ஒரு முறை இதுபோன்ற தாக்குதலை அவர்கள் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

சித்திரவதை
கடந்த 14 ஆம் தேதி நள்ளிரவு ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 500க்கும் அதிகமான மீனவர்கள் பாக் ஜலசந்தி அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கொடூரமாக தாக்கி அடித்து விரட்டி இருக்கின்றனர்.

கண்ணில் பலத்த காயம்
அத்துடன் அவர்களின் 3 விசைப்படகுகளை பிடித்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை இரவு முழுக்க அடித்து சித்திரவதை செய்து உள்ளனர். பல மணி நேர துன்புறுத்தல்களுக்கு பிறகே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை விடுவித்து இருக்கின்றது. அதில் மீனவர் ஒருவரின் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

மீனவர்கள் கோரிக்கை
இந்த நிலையில் அடுத்த 2 நாட்களில் இலங்கை கடற்படையினர் அத்துமீறி மீனவர்கள் 14 பேரை கைது செய்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதே மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications