2.38 லட்சம் டன் நிலக்கரி எங்கே?... தவறு யார் செய்தாலும் நடவடிக்கை பாயும் என்கிறார் செந்தில்பாலாஜி
வடசென்னை அனல் மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரியை காணவில்லை என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். அனல்மின் நிலைய பதிவேட்டில் இருக்கிறது; ஆனால் இருப்பில் நிலக்கரியை காணவில்லை என்றும் அவர
சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரியை காணவில்லை என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். ரூ.85 கோடி மதிப்பிலான நிலக்கரிகள் மாயமானது முதல் கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அனல் மின் நிலையத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து உரிய ஆய்வு நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வடசென்னை அனல்மின் நிலையத்தில் முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், 2வது யூனிட்டில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட்டும் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. வல்லூர் அனல் மின் நிலையத்தில் 3 யூனிட்டுகளில் 1,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அனல் மின் நிலையங்களுக்கு ஒடிசா மாநிலத்தில் இருந்து கப்பல் மூலம் எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு நிலக்கரி கொண்டு வரப்படுகிறது.
துறைமுகத்தில் இருந்து கன்வேயர் பெல்ட் வழியாக வடசென்னை அனல்மின் நிலையம் மற்றும் வல்லூர் அனல் மின்நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.மேலும் மற்றொரு கன்வேயர் பெல்ட் வழியாக திறந்தவெளி சேமிப்பு கிடங்குக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து தனியார் மின் நிலையங்களுக்கும், இதர நிறுவனங்களுக்கும் லாரிகள் மூலம் நிலக்கரி அனுப்பப்படுகிறது. இவ்வாறு கொண்டு வரப்படும் நிலக்கரியை துகள்களாக மாற்றி கொதிகலனில் செலுத்தப்பட்டு மின் உற்பத்தி நடைபெறுகிறது.

நிலக்கரி மாயமானது எப்படி
வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஒரு யூனிட்டில் மின்சாரம் உற்பத்தி செய்ய 3 ஆயிரத்து 500 டன் நிலக்கரி தேவைப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிலக்கரி கையாளும் பிரிவு அதிகாரிகள் கிடங்கில் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது 3.68 லட்சம் டன் நிலக்கரி கையிருப்பு இருக்க வேண்டிய சூழ்நிலையில், 2.38 லட்சம் டன் நிலக்கரி மாயமாகி இருந்ததாகவும், 1.30 லட்சம் டன் நிலக்கரி மட்டுமே இருப்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே 2.38 லட்சம் டன் நிலக்கரி டன் நிலக்கரி மாயமானதா அல்லது மின்உற்பத்திக்கு கூடுதலாக பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து தமிழக மின்வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்து இருந்தனர்.

மின்சாரத்துறை அமைச்சர் ஆய்வு
இந்த நிலையில் இன்றைய தினம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி,
கடந்த காலம் போல இல்லாமல் வெளிப்படையான நிர்வாகத்தை தருவதே தமிழக அரசின் நோக்கம் என்று கூறினார்.

தவறு செய்தவர்களுக்கு தண்டனை
வடசென்னை அனல் மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரியை காணவில்லை. அனல்மின் நிலைய பதிவேட்டில் இருக்கிறது; ஆனால் இருப்பில் நிலக்கரியை காணவில்லை. சுமார் ரூ.85 கோடி மதிப்பிலான நிலக்கரிகள் மாயமானது முதல் கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அனல் மின் நிலையத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து உரிய ஆய்வு நடத்தப்படும். நிலக்கரி காணாமல் போன விவகாரத்தில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கூடுதல் சுமை இல்லை
வடசென்னை அனல்மின் நிலையம் 7 ஆண்டுகளுக்கு பின்னர் தொடர்ந்து 100 நாட்களை கடந்து இயங்கி மின் உற்பத்தியில் சாதனை படைத்துள்ளது. இந்தாண்டு மின்கட்டணத்தில் கூடுதல் வைப்புத்தொகை வசூலிக்கப்படவில்லை என்று கூறினார். கூடுதல் வைப்புத்தொகை விவகாரத்தில் மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தக்கூடாது என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். குறைபாடுகள் உள்ள 8,900 மின்மாற்றிகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

உழைப்பு வீண்
கடந்த சில ஆண்டுகளாக மின்வாரியத்தில் நடைபெற்ற நிர்வாகக் குளறுபடிகள் சரிசெய்யப்படும் என ஏற்கெனவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தண்டனையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. மின்வாரியத்தில் நன்றாக உழைக்கக்கூடிய அதிகாரிகள் சிறப்பாகச் செயல்படுகின்றனர். அவர்களின் உழைப்பு வீணடிக்கப்பட்டு சீர்கெட்ட நிர்வாகத்தால், 1 லட்சத்து 59 ஆயிரம் கோடி இழப்புக்கு, வட்டி செலுத்தும் அளவுக்கு மின்வாரியம் உள்ளது.

மின்வாரியம் மீட்டெடுப்பு
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மின் கட்டணம், சரியான வழியில் பயன்படுத்தப்பட்டு, மக்களுக்கு சேவை செய்யக்கூடிய மின்வாரியத்தில் இவ்வளவு பெரிய தவறுகள் நடந்திருப்பது, கடந்த அதிமுக அரசை நினைத்து வருத்தம் ஏற்படுகிறது. மோசமான நிர்வாகத்திலிருந்து மின்வாரியத்தை மீட்டெடுத்து வெளிப்படையான நிர்வாகத்தை மின்வாரியம் முன்னெடுக்கும்.

கட்டண உயர்வு
3,000 மில்லியன் யூனிட் பயன்படுத்தி, மின்வாரியத்துக்குச் செலுத்திய கட்டணத்தைவிட, 4,400 மில்லியன் யூனிட் பயன்படுத்தப்பட்டு, கூடுதலாக ரூ.80 கோடிதான் வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, கூடுதல் வைப்புத்தொகை வேண்டாம் என முதல்வர் உத்தரவு வழங்கி, இந்த ஆண்டு அந்தத் தொகை வசூலிக்கப்படவில்லை. இதனால் கட்டண உயர்வு தவிர்க்கப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வு குறித்து குறிப்பிட்டுச் சொன்னால் நேரடி கள ஆய்வு செய்து உரிய தீர்வு காணப்படும். 94987 94987 என்ற மின் நுகர்வோருக்கான சேவை மையத்துக்குத் தொடர்புகொண்டு மின் கட்டணம் தொடர்பான புகார்களை அளிக்கலாம்.

மின்சாரத்துறையில் ஷாக்கடிக்குமா
அதிமுக ஆட்சி காலத்தில் ஒவ்வொரு துறையிலும் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து திமுக அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மாஜி அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சோதனை நடத்தி வழக்குப் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் அனல் மின்நிலையத்தில் நடந்துள்ள முறைகேடுகளை கண்டுபிடித்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி. யாருக்கு ஷாக்கடிக்கப்போகிறது என்று பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications