2020 நியூஸ் மேக்கர் : உலகமே கொரோனாவில் இருக்க கைலாசாவில் தங்க நாணயம் வெளியிட்ட நித்யானந்தா
சென்னை: 2020 ஆம் ஆண்டில் உலகத்தில் பல சோக நிகழ்வுகள் நடந்தாலும் கைலாஷா என்ற நாடு மட்டும் சந்தோஷ நிகழ்வுகளால் நிரம்பி வழிந்தது. நித்யானந்தாவும் அவரது நூற்றுக்கணக்கான சிஷ்யைகளும் ஆடி பாடி மகிழ்ச்சியோடு பஜனை செய்து கொண்டிருந்தனர். இந்தியாவில் கொரோனாவின் பிடியில் சிக்கி பலரும் பணத்தட்டுப்பாட்டில் இருக்கும் போது நித்யானந்தா தங்க நாணயங்களை வெளியிட்டு உலகத்திற்கே செய்தி கொடுத்துக்கொண்டிருந்தார். 2020ஆம் ஆண்டில் கைலாசாவில் இருந்து நித்யானந்தா வெளியிட்ட அறிவிப்புகளும் அதற்கு நம் மக்கள் செய்த எதிர்வினையையும் பார்க்கலாம்.
எனக்கென்று ஒரு நாடு என் மக்கள் என்று கூறி கைலாசா நாட்டை வாங்கி அதில் தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார் நித்யானந்தா. கைலாசாவிற்கு மூன்று நாட்கள் சுற்றுலா வருவதற்கு இலவச விசாவும் அறிவித்து விட்டார்.
இந்தியாவில் இருந்த வரைக்கும் நித்யானந்தா தினம் தினம் செய்தியில் அடிபட்டுக்கொண்டே இருந்தார். பலாத்கார வழக்கில் அகமதபாத் காவல்துறையினரால் குற்றவாளியாக தேடப்பட்டு வரும் நித்தியானந்தா, ஒரு புதிய இறையாண்மை தேசத்தை உருவாக்குவதாகவும், அதற்கு கைலாசா என்று பெயரிடுவதாகவும் தெரிவித்தார். யுட்யூப் சேனலில் தினம் தினம் வீடியோ போட்டு எல்லோரையும் அலற வைத்தார்.
விநாயகர் சதுர்த்தி தினத்தன்று சிறப்பு பூஜைகளை செய்து கைலாசா நாட்டின் புதிய தங்க காசுகளை அறிமுகம் செய்தார் நித்யானந்தா. பழைய கால இந்திய நாணயங்களைப் போல காலணா, எட்டணா என தொடங்கி 10 பைசா வரை 5 வகையான நாணயங்களை அறிமுகம் செய்தார்.
மன்னர் காலத்தைப் போல பொற்காசுகளை புழக்கத்தில் விட்ட நித்யானந்தா இந்த காசுகளை கொண்டு உலகின் 56 இந்து நாடுகளோடு வர்த்தகம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவின் மன்னராட்சிக் காலங்களில் பயன்படுத்தப்பட்ட பழங்கால நாணயங்களின் வடிவில் தங்க நாணயங்களாக வெளியிடப்பட்டுள்ளன.
மீட்டெடுத்த நித்தி
நம் நாட்டில் முன்பு புழக்கத்தில் இருந்த நாணயங்களை புதுப்பித்து மீட்டெடுப்பு செய்துள்ளதாக விளக்கம் கொடுத்துள்ளார் நித்யானந்தா. இதே போல 2டாலர், 3 டாலர், 4 டாலர் 5 டாலர், 10 டாலர் ஆகிய நாணயங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
கைலாசா பாஸ்போர்ட்
உள்நாட்டுக்கு என ஒரு கரன்சியையும் வெளிநாட்டுக்கு என ஒரு கரன்சியையும் ரெடி செய்துள்ள நித்யானந்தா 300 பக்கம் கொண்ட பொருளாதார கொள்கைகளையும் வகுத்துள்ளதாகவும் தெரிவித்தார். தனது நாட்டிற்கு என்று புதிய கல்விக்கொள்கை, பணக்கொள்கை, ரிசர்வ் வங்கி என அனைத்து அறிவுப்புகளையும் வெளியிட்ட நித்யானந்தா தன் நாடு கைலாசா எங்கிருக்கிறது என்று மட்டும் அறிவிக்காமல் இருந்தார்.
கைலாசாவில் அனுமதி கேட்ட தொழிலதிபர்கள்
நித்யானந்தாவின் அறிவிப்பை பார்த்த தமிழக தொழில் அதிபர்கள் சில கைலாசாவில் ஹோட்டல் திறக்கவும், ஜவுளிக்கடை திறக்கவும் அனுமதி கேட்டு கடிதம் எழுதினர். அதற்கு யுட்யூப் மூலம் பதில் சொன்ன நித்யானந்தா, திருவண்ணாமலை, மதுரை, திருச்சி மக்கள் கைலாசாவில் கடை திறக்க முன்னுரிமை கொடுக்கப்படும் என்று கூறினார்.
மூன்று நாட்கள் எல்லாம் இலவசம்
சில மாதங்கள் செய்தி வெளிச்சத்திற்குள் வராமல் இருந்த நித்யானந்தா திடீரென்று புதிய அறிவிப்பை வெளியிட்டார். கைலாசாவுக்கு மூன்று நாட்கள் வந்து செல்வதற்கு இலவச விசா தரப்படும். இலவச விமானத்தில் கைலாசா வந்து செல்லலாம். கைலாசாவில் தங்கும் அந்த மூன்று நாட்களுக்கும் உணவு, தங்குமிடம் இலவசம் என்று கூறி மீண்டும் ஊடக வெளிச்சத்திற்குள் வந்திருக்கிறார்.
ஆஸ்திரேலியாவிற்கு வாங்க
ஆஸ்திரேலியா வரை உங்கள் சொந்த செலவில்தான் வரவேண்டும் என்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து கருடா என்ற சிறிய விமானம் கைலாசாவிற்கு வரும். அதில்தான் வருவதற்குத்தான் இலவச கட்டணம் என்றும் கூறியுள்ளார்.
மூன்று நாட்கள் மட்டுமே
சிவனை வழிபடுகின்ற ஆன்மீக நோக்கத்தோடு மட்டுமே கைலாசாவிற்கு வர வேண்டும் என்று குறிப்பிட்டு சொல்லி இருக்கும் நித்யானந்தா, மூன்று நாட்களுக்கு மேல் கைலாசாவில் தங்க முடியாது என்றும் கூறியுள்ளார். கைலாசாவிற்கு வர விரும்புவோர் [email protected] எனும் மின் அஞ்சலில் தங்களது விபரத்துடன் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவி்த்திருக்கிறார். எது எப்படியோ 2020ஆம் ஆண்டில் உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கியிருக்க, நித்யானந்தா மட்டும் என் நாடு என் மக்கள் என்று ஜாலியாக பஜனை, பாட்டு என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்.