சேர்ந்தால் சிக்கல்.. பதற்றத்தில் நகம் கடித்த ‘மூவர்’! எடப்பாடி அணியின் மாஜிக்கள் போடும் மனக் கணக்கு!
சென்னை : அதிமுகவில் எடப்பாடி அணியைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் சிலர், தேர்தலை கவனத்தில் கொண்டு, ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைய விரும்புவதாகக் கூறப்படுகிறது. ஆனால், தென் மாவட்டங்களைச் சேர்ந்த 3 பேர் மட்டும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணையக்கூடாது என தங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டி வருகிறார்களாம்.
ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் வந்தால், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவமும், முக்கிய பதவிகளும் பறிக்கப்பட்டு விடுமே என்பதுதான் அவர்களின் அச்சத்திற்குக் காரணமாம்.
பிரதமர் மோடியின் வருகையின்போது, ஈபிஎஸ்ன் - ஓபிஎஸ் இடையே இணக்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என அவர்கள் மூவரும் உச்சகட்ட பரபரப்பில் இருந்தார்களாம்.

பாஜகவின் விருப்பம்
பாஜக தலைமை, ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைந்து செயல்பட வேண்டும், டிடிவி தினகரன், சசிகலாவையும் இணைத்துக்கொள்ள வேண்டும், அப்போதுதான் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கான வோட் கன்வெர்ஷனுக்கு உதவும் என உறுதியாக கூறி வந்தாலும், அதனை ஏற்க மறுக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஓபிஎஸ் தேவையே இல்லை எனக் கூறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. நாம் இல்லாமல் பாஜகவால் கண்டிப்பாக ஜெயிக்க முடியாது, எப்படியும் தன்னிடம் தான் வரவேண்டும் எனக் கருதும் ஈபிஎஸ், ஓபிஎஸ்ஸை சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று பாஜகவுக்கும் தெரியப்படுத்தி வருகிறார்.

வடக்கு - தெற்கு
எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த வடக்கு, மேற்கு மண்டலத்தைச் முக்கிய நிர்வாகிகள் பலரும், எக்காரணம் கொண்டும், ஓபிஎஸ், டிடிவி தினகரனை சேர்த்துக்கொள்ளக்கூடாது என்ற கருத்திலேயே இருந்து வருகின்றனராம். ஓபிஎஸ் இணைவதால் தங்களுக்கு வாக்குகள் உயரப்போவதில்லை, ஆனால் தங்கள் முக்கியத்துவம் பறிக்கப்படும் என அவர்கள் கருதுகின்றனர். எனினும், தென் மாவட்டங்களைச் சேர்ந்த சில முன்னாள் அமைச்சர்கள், தாங்கள் தெற்கில் வெற்றி பெற எப்படியும் ஓபிஎஸ், தினகரனை ஆதரிக்கும் முக்குலத்தோர் சமூக வாக்குகள் வேண்டும் என்றும் கருதுகின்றனர்.

ஓபிஎஸ் இணையலாம்.. ஆனால்
தென் மாவட்டங்களைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி அணியின் பல முக்கிய நிர்வாகிகள், தங்கள் தொகுதியிலேயே தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் அளவுக்கு முக்குலத்தோர் வாக்கு வங்கி இருப்பதால், அவர்கள் ஓபிஎஸ்ஸோடு இணைய வேண்டும் என்று விரும்புகின்றனராம். ஆனால், மீண்டும் அதிமுகவில் ஓபிஎஸ் அதிகாரம் செலுத்தக்கூடாது எனக் கருதுவதாகத் தெரிகிறது. அதிமுக தொண்டர்கள் மனநிலை ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைந்து செயல்பட விரும்புவதாக அவர்கள் உணர்ந்துள்ளனராம்.

3 பேர்
ஆனால், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான ஆர்.பி.உதயகுமாரும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான நத்தம் விஸ்வநாதனும், திண்டுக்கல் சீனிவாசனும் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் கட்சியில் இணைவதை சற்றும் விரும்பவில்லையாம். ஒருக்காலும், ஓபிஎஸ்ஸை எடப்பாடி பழனிசாமி சேர்த்துக் கொள்ளக்கூடாது என ஒற்றைக்காலில் நிற்கிறார்களாம்.

முக்கிய பொறுப்புகள்
அதற்குக் காரணம், ஓபிஎஸ் - ஈபிஎஸ் என அதிமுக அணி பிரிந்ததன் காரணமாகவே இவர்கள் மூவருக்கும் முக்கியமான பதவிகள் கிடைத்தன. நத்தம் விஸ்வநாதனுக்கு துணை பொதுச் செயலாளர் பொறுப்பு கிடைத்தது. திண்டுக்கல் சீனிவாசனுக்கு பொருளாளர் பொறுப்பு கிடைத்தது. ஆர் பி உதயகுமாருக்கு எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி கொடுத்தார் ஈபிஎஸ். குறிப்பாக, ஓபிஎஸ் சார்ந்துள்ள சமூகத்தைச் சேர்ந்தவர்களான இவர்கள் மூவருக்கும் முக்கிய பதவிகளை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி.

பதவி + அதிகாரம்
ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கினாலும், முக்குலத்தோர் வாக்கு வங்கியை இழந்துவிடக் கூடாது என்றே இந்த ஆக்ஷனை எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில், ஓபிஎஸ்ஸை மீண்டும் கட்சியில் இணைத்தால் தங்களுக்கு வழங்கப்பட்ட பதவிகள் பறிபோகுமே, அந்தப் பதவிகள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சென்றுவிடுமே, தென் மாவட்டங்களில் தங்கள் அதிகாரத்தை இழந்துவிடுவோமே என பதற்றத்தில் இருந்து வருகின்றனராம்.

பதற்றத்தில் மூவர்
சமீபத்தில், பிரதமர் மோடி திண்டுக்கல் வந்தபோது, மதுரை விமான நிலையத்தில் இவர்கள் மூவருமே இருந்த நிலையில், ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைப்புக்கு பிரதமர் மோடி அச்சாரம் போட்டு விடுவாரா என அச்சத்தில் இருந்தார்களாம். இருவரையும் ஒரேமாதிரி நடத்தியதில் ஈபிஎஸ் அப்செட் ஆகி, ஓபிஎஸ் உடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை என கட் அண்ட் ரைட்டாக தெரிவித்த பிறகு நிம்மதிப் பெருமூச்சு விட்டார்களாம்.












Click it and Unblock the Notifications