குஜராத்தில் சிக்கிய 3,000 கிலோ ஹெராயின்- மார்க்கெட் ரேட் ரூ21,000 கோடி-சென்னைக்கும் 'ஷாக்' லிங்க்!
பூஜ்/சென்னை: குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் ரூ21,000 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர்.
குஜராத்தின் கட்ச் பிராந்தியத்தில் முந்த்ரா துறைமுகம் உள்ளது. நாட்டில் தனியாருக்கு சொந்தமான மிகப் பெரிய துறைமுகம் இது.
கட்ச் அரபிக் கடல் பகுதியில் அதிகளவு போதைப் பொருட்கள் கடத்தல், பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவல் என்பது அடிக்கடி நிகழ்கிறது. கட்ச் கடற்கரை பகுதிகளில் எல்லை பாதுகாப்பு படையினர் முகாமிட்டிருந்தாலும் அவர்களையும் மீறியதாக இந்த ஊடுருவல்களும் கடத்தல்களும் தொடர்கிறது.
திமுக எம்பியாகும் ராஜேஷ்குமார்.. ம்க்கும் 1 வருஷம் கூட இல்லையா?.. இதுக்குத்தான் இவ்வளவு போராட்டமா?
குஜராத் முந்த்ரா துறைமுகம்
இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரிய அளவு ஹெராயின் போதைப் பொருட்கள் கொண்ட கண்டெய்னர்கள் முந்த்ரா துறைமுகத்துக்கு வருவதாக வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து முந்த்ரா துறைமுகத்துக்கு வந்த கண்டெய்னர்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் சிக்கியதுதான் டால்கம் பவுடர் பெயரிலான 2 கண்டெய்னர்கள்,
ஆப்கானில் இருந்து ஏற்றுமதி
ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில் உள்ள ஹாசன் ஹுசைன் லிமிடெட் நிறுவனம் இந்த 2 டால்கம் பவுடர் கண்டெய்னர்களை ஏற்றுமதி செய்திருந்தது. ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் கொண்டு செல்ல்லப்பட்டு பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் இருந்து குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் விஜயவாடாவைச் சேர்ந்த ஆஷி டிரேடிங் நிறுவனம் இதனை இறக்குமதி செய்திருந்தது. இந்த டால்கம் பவுடர் கண்டெய்னர்களை சோதனையிட்ட அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். ஆம் இந்த 2 கண்டெய்னர்களில் இருந்தது மொத்தம் 3 டன் ஹெராயின். இதன் சர்வதேச மதிப்பு ரூ21,000 கோடி என்கின்றனர் அதிகாரிகள். இதுவரை இவ்வளவு பெரிய அளவிலான போதைப் பொருள் இந்தியாவில் சிக்கியது இல்லை எனவும் கூறப்படுகிறது.
சென்னையில் ரெய்டு
இது தொடர்பான விசாரணை நடத்திய அதிகாரிகள் 2 பேரை கைது செய்தனர். அத்துடன் அகமதாபாத், டெல்லி, சென்னை, காந்திதாம், மாண்ட்வி உள்ளிட்ட இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையில் எந்தெந்த இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது என்கிற விவரங்கள் வெளியாகவில்லை. இதற்கு முன்னர் 2017-ம் ஆண்டு 1,500 கிலோ ஹெராயின் போதைப் பொருள் குஜராத்தில் சிக்கியிருந்தது.
சினிமாவை மிஞ்சும் கடத்தல்
நடிகர் ஆர்யா நடித்த மீகாமன் என்ற திரைப்படத்தில் வில்லன் ஜோதியைப் பிடிக்க வைக்கப்படும் ஒரு பொறி 1,000 டன் ஹெராயின் போதைப் பொருள். அதுவும் குஜராத்தில் 1,000 கிலோ ஹெராயின் கண்டெய்னர் வந்திறங்கியதாக காட்டியிருப்பார்கள். இந்த சினிமா காட்சிகளை நிஜமாக்கும் வகையில் 3 டன் ஹெராயின் குஜராத்தில் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் ஹெராயின் கடத்தல் தொடர்பாக முக்கிய புள்ளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.