தமிழகம் முழுவதும் இன்று 37 லட்சம் கடைகள் மூடல்... பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு..!
சென்னை: முழு ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் இன்று 37 லட்சம் கடைகள் மூடப்பட்டுள்ளதாக வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
பெட்டிக்கடைகள் தொடங்கி பெரிய ஷாப்பிங் மால்கல் வரை அரசின் உத்தரவை ஏற்று இன்று மூடப்பட்டிருந்தது. இதனால் பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பும் ஏற்பட்டிருக்கிறது.

பொதுவாக மற்ற நாட்களை காட்டிலும் வார விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அன்று தான் பொதுமக்கள் அதிகமாக ஷாப்பிங் செல்வார்கள். இதனால் வர்த்தகமும் சூடு பிடித்து நடைபெறும். இந்நிலையில் இன்று ஊரடங்கு காரணமாக நேற்றைய தினமே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை முன் கூட்டியே வாங்கி வைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இது தொடர்பாக கூறும் வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, ஊரடங்கை அரசு திடீரென அறிவிப்பதால் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதாகவும், மக்கள் பதற்றத்துக்கு உள்ளாவதால் கடைகளில் கூட்டம் அதிகமாகி கொரொனா பரவலுக்கு அது அதிகம் வழி வகுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை அறிவிப்பதற்கு முன் அரசு தங்களிடம் கலந்து ஆலோசித்திருக்கலாம் என்றும் இனி வரும் நாட்களிலாவது முறையாக வணிகர்களை அழைத்துப் பேசி ஊரடங்கு குறித்து முடிவு எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
மேலும், முழு ஊரடங்கு அறிவிக்கும்பட்சத்தில் குறைந்தது 3 நாட்களாவது மக்களுக்கு அவகாசம் அளித்தால் அவர்களுக்கு தேவையான பொருட்களை கூட்ட நெரிசலின்றி வாங்குவதற்கு உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications