அடுத்த லிஸ்ட்.. 44 பேரை அதிரடியாக தூக்கிய ஓபிஎஸ்.. மொத்தமா 66.. இத்தனை பேர் முன்னாள் அமைச்சர்கள்!
சென்னை : எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் 44 பேரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் நீக்கப்படுவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
Recommended Video
நேற்று 22 பேரை நீக்கி ஓபிஎஸ் உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களான மேலும் 44 பேரை அவர் கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்.
ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 22 பேரை கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ள நிலையில், இரண்டாவது லிஸ்ட்டையும் இன்று வெளியிட்டுள்ளார் ஓபிஎஸ்.

ஓபிஎஸ்ஸை தூக்கிய எடப்பாடி
கடந்த 11-ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கினார். அதனைத் தொடர்ந்து நேற்று மாலை ஓபிஎஸ் மகன்கள் ஓ.பி.ரவீந்திரநாத், ஜெயபிரதீப் மற்றும் 5 மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 18 பேரை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கி அதிரடியாக உத்தரவிட்டார்.

ஓபிஎஸ் பதிலடி
அதற்கு பதிலடியாக, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேரை கட்சியில் இருந்து ஓபிஎஸ் நீக்கி அறிவிப்பு வெளியிட்டார். கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட 22 பேர் நீக்கப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் அறிவித்திருந்தார்.

மேலும் 44 பேர்
இந்நிலையில் இன்று மேலும் 44 பேரை அதிமுகவில் இருந்து நீக்கி ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். இந்த இரண்டாவது பட்டியலில் 10க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்களும், பல எம்.எல்.ஏக்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று 22 பேர், இன்று 44 பேர் என இதுவரை எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களான 66 பேரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

முன்னாள் அமைச்சர்கள்
முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பொள்ளாச்சி ஜெயராமன், பி.வி.ரமணா, மாதவரம் மூர்த்தி, பெஞ்சமின், கே.சி.வீரமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கே.பி.அன்பழகன், பரஞ்சோதி, காமராஜ், கே.வி.ராமலிங்கம், கே.சி.கருப்பணன், சண்முகநாதன் உள்பட 44 எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் நீக்கப்படுவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.

அதிரடியாக நீக்கம்
இவர்கள் அனைவரும் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள். கட்சியினர் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர் சந்திப்பின்போது படித்துக் காட்டினார்.












Click it and Unblock the Notifications