தமிழகம் முழுவதும் 5 லட்சம் சந்தன மரங்கள் நடவு..கார்பன் உமிழ்வை குறைக்க ஸ்டாலின் புது திட்டம்
சென்னை: ‛‛இனி வரும் காலங்களில் அனைத்து துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களையும், காலநிலை நடவடிக்கையோடு சேர்த்து செயல்படும் வகையில் பட்ஜெட் உருவாக்கப்படும். நம் மாநிலத்தில் கார்பன் உமிழ்வை குறைக்க 2030-ம் ஆண்டுக்குள் திட்டம் உருவாக்கி செயல்படுத்தப்படும். தமிழ்நாடு முழுவதும் நடவு செய்ய 5 லட்சம் சந்தன மரக்கன்றுகள் வழங்கப்படும்'' என்று சென்னையில் நடந்த ‛தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 4.0'வில் (Tamil Nadu Climate Summit 4.0)முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
தற்போது உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தால் பெரிய அளவில் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. இதனை சரிசெய்ய உலக நாடுகள் முயன்று வருகின்றன.
அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னையில், "தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 4.0" தொடக்க விழா இன்று நடந்தது. இந்த மாநாடு 2 நாட்கள் நடைபெற உள்ளது.
தொடக்க விழாவில் காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதோடு, புதிய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்
அதன்படி இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னையில் சுழற்சிப் பொருளாதார மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை-இந்தியத் தொழில்நுட்பக் கழகம், ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் தமிழ்நாடு பசுமைக் காலநிலை நிறுவனம் ஆகியவற்றிக்கு இடையே மேற்கொள்ளப்பட்டது.
புதிய திட்டம் தொடக்கம்
தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 4.0" மாநாட்டினை தொடங்கி வைத்து, TN-SHORE (Tamil Nadu Sustainably Harnessing Ocean Resources and Blue Economy) எனப்படுகின்ற தமிழ்நாடு கடலோர வளங்களை நிலைநிறுத்தத்தக்க வகையில் பயன்படுத்துதல் மற்றும் நீலப் பொருளாதாரம் எனும் திட்டத்தினை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பசுமை கால நிதி
அதேபோல் கண்ணபிரான் பாலிமர்ஸ், ஊர் கேப்ஸ் மற்றும் ஈசிகோ பவர் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு சுழல் பொருளாதாரம் மற்றும் பசுமை போக்குவரத்து ஆகிய சூழலுக்கு ஏற்ப தொழில் முனைவுகளை மேம்படுத்தும் வண்ணம் தமிழ்நாடு பசுமைக் காலநிலை நிதியினை வழங்கினார். மேலும் தஞ்சை மனோராவில், கடற்பசு பாதுகாப்பு மையம் அமைத்திட முதல்வர் முக ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
4 முக்கிய அறிவிப்புகள்
அதன்பிறகு மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று 4 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: முதல் அறிவிப்பு என்னவென்றால் இனி வரும் காலங்களில் அனைத்து துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களையும், காலநிலை நடவடிக்கையோடு சேர்ந்து செயல்படும் வகையில் பட்ஜெட் உருவாக்கப்படும்.
2030க்கான இலக்கு
2வது அறிவிப்பு என்னவென்றால் நமது நாடு பாரீஸ் ஒப்பந்தத்தின்படி கார்பன் உமிழ்வை குறைக்க தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட சில பங்களிப்புகளை ஏற்றுக்கொண்டதுபோல் நம் மாநிலத்தில் கார்பன் உமிழ்வை குறைக்க 2030ம் ஆண்டுக்குள் செயல்படுத்தக்கூடிய மாநில அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்பு உருவாக்கப்பட்டு அதனை இலக்குகளாக கொண்டு செயல்படுத்தப்படும்.
5 லட்சம் சந்தன மரம்
3வது அறிவிப்பு தமிழ்நாடு முழுவதும் நடவு செய்ய 5 லட்சம் சந்தன மரக்கன்றுகள் வழங்கப்படும். 4வது அறிவிப்பு வரும் காலங்களில் தொழிற்சாலைகளும், அரசு நிறுவனங்களும் இணைந்து பசுமை தொழில்நுட்பங்களில் முதலீடு செய்து உமிழ்களை குறைக்கவும், உள்ளாட்சி அமைப்புகள் காலநிலை நடவடிக்கைக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படவும் இளைஞர்கள் காலநிலை தலைவர்களாகவும், தூதுவர்களாக உருவாக்கவும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
திராவிட மாடல் அரசை பொறுத்தவரை சமூகநீதி ஒரு கண் என்றால் காலநிலை நீதி மற்றொரு நீதி. எனவே காலநிலை மாற்றத்தை அனைவரும் சேர்ந்து எதிர்கொள்வோம். வெல்வோம் ஒன்றாக..'' என்று பேசினார்.












Click it and Unblock the Notifications