அப்பாவை பார்க்க சென்ற 5 வயது மகள்.. கடையின் இரும்பு கேட் விழுந்து பலியான பரிதாபம்.. சென்னையில் சோகம்
நேற்று இரவு வழக்கம் போல தனது தந்தையை அழைத்து வருவதற்காக சிறுமி ஹரிணி ஸ்ரீ ஆசையாக தனது தாயுடன் அங்கு சென்றுள்ளார்.
சென்னை: சென்னை கீழ்பாக்கத்தில் தனது தந்தையை பார்ப்பதற்காக அவர் வேலை செய்யும் கடைக்கு சென்ற 5 வயது சிறுமி மீது ராட்சத இரும்பு கேட் விழுந்ததில் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல நூறு கிலோ எடைக்கொண்ட அந்த இரும்பு கேட்டை இத்தனை அஜாக்கிரதையாக வைத்திருந்ததாக கூறி அக்கடையின் மேலாளர், காவலாளி ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவன் மீது இரும்பு கேட் விழுந்து பலியான ஒரு சில தினங்களிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.
16 வயசு சிறுமி மாரடைப்பால் பலி! முதல் 6 நிமிடங்கள் முக்கியம்.. குழந்தைகளிடம் இந்த அறிகுறிகளை பாருங்க
5 வயது சிறுமி
சென்னை நம்மாழ்வார்பேட்டை சிவகாமிபுரம் பராக்கா சாலையைச் சேர்ந்தவர் சங்கர் (37). இவர் கீழ்பாக்கத்தில் உள்ள பிஎம்எஸ் வளாகத்தில் இயங்கி வரும் ஒரு தனியார் துணிக்கடையில் உள்ள கார் பார்க்கிங்கில் வேலை செய்து வருகிறார். இவருக்கு வாணி என்ற மனைவியும், ஹரிணி ஸ்ரீ என்ற 5 வயது மகளும், 2 மகன்களும் இருக்கிறார்கள். ஹரிணி ஸ்ரீ ஒரு தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வந்தார்.
ஆசையாக சென்ற சிறுமி
இதனிடையே, தினந்தோறும் இரவு வாணியும், மகள் ஹரிணி ஸ்ரீயும் தந்தை சங்கர் பணிபுரியும் கடைக்கு சென்று, தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்புவது வழக்கம். அந்த வகையில், நேற்று இரவும் வழக்கம் போல தனது தந்தையை அழைத்து வருவதற்காக சிறுமி ஹரிணி ஸ்ரீ ஆசையாக தனது தாயுடன் அங்கு சென்றுள்ளார். இதையடுத்து, தனது வேலையை முறைப்படி முடித்ததற்கான நோட்டில் கையெழுத்திட்ட சங்கர், தனது மோட்டார் சைக்கிளை எடுத்து வந்துள்ளார்.
சிறுமி மீது விழுந்த இரும்பு கேட்
அப்போது, தாய் வாணி சங்கரின் மோட்டார் சைக்கிளில் ஏறியுள்ளார். ஆனால், சிறுமி ஹரிணியோ கடை வாசலில் இருக்கும் இரும்பு கேட் அருகே நின்று கொண்டு தனது பெற்றோரிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில், காவலாளி வேகமாக கேட்டை மூட, அது அப்படியே சரிந்து ஹரிணி ஸ்ரீ மீது விழுந்தது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ஹரிணி ஸ்ரீ ரத்த வெள்ளத்தில் துடித்தார்.
சிகிச்சை பலனின்றி பலி
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சங்கரும், வாணியும் மகள் ஹரிணியை மீட்டு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அதிக ரத்தப்போக்கு காரணமாக ஹரிணி ஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கீழ்பாக்கம் போலீஸார், அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், காவலாளி சம்பத், துணிக்கடை மேலாளர் ஆகியோரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.