அடிக்கிற வெயிலுக்கு இது வேறயா.. சிக்கனம் என்ற பெயரில் பயணிகளுக்கு ஷாக் கொடுத்த வந்தே பாரத் ரயில்
சென்னை: கோடை காலத்தில் நாடு முழுவதும் வெப்ப அலை வாட்டி வதைக்கும் நிலையில், வந்தே பாரத் ரயில்களில் பயணிகளுக்கு சிரமத்தை கொடுக்கும் விதமாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் ரயில் பயணிகளின் பயண வசதியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், அதிவேகம், விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகள் உள்ளிட்டவைகளுடன் வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

வந்தே பாரத் ரயில்: சென்னை - நெல்லை, சென்னை - கோவை, கோவை - பெங்களூர் என தமிழகத்திலும் 5 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயில்களில் வைஃபை வசதி, விசாலமான ஜன்னல் கண்ணாடிகள், 32 இஞ்ச் எல்.இ.டி திரைகள், தானியங்கி கதவுகள், சாய்வு இருக்கைகள் என வந்தே பாரத் ரயிலில் வசதிகளை அடுக்கி கொண்டே போகலாம்.
1 லிட்டர் வாட்டர் பாட்டில்: வந்தே பாரத் ரயிலில் பயணிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் எந்த வித கட்டணமும் இன்றி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான், இனி ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலுக்கு பதிலாக அரை லிட்டர் பாட்டில் மட்டுமே கொடுக்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக ரயில்வே கூறுகையில், "வந்தே பாரத் ரயிலில் 500 மில்லி லிட்டர் வாட்டர் பாட்டில் மட்டுமே இனி பயணத்தின் போது வழங்கப்படும்.
பயணிகளுக்கு தேவைப்படும் பட்சத்தில் கூடுதலாக ஒரு அரை லிட்டர் வாட்டர் பாட்டில் எந்த கட்டணமும் இன்றி வழங்கப்படும். குடிநீர் வீணாவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் விமர்சனம்: குடிநீர் வீணாக்க கூடாது என்ற நோக்கத்தில்தான் பயணிகளுக்கு கொடுக்கப்படும் வாட்டர் பாட்டிலை அரை லிட்டராக குறைத்து இருப்பதாக ரயில்வே கூறினாலும் கடுமையான வெப்ப அலை வாட்டி வதைக்கும் நேரத்தில், இந்த நடவடிக்கை தேவைதானா? என்று பயணிகள் எழுப்பும் கேள்வியாக உள்ளது.
இந்தியா முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பம் வாட்டி வதைக்கும் நிலையில், தற்போதைக்கு இந்திய ரயில்வேயின் இந்த முன்னெடுப்பு அவசியமற்றது என்றும் வெப்ப காலத்திற்கு பிறகு கூட எடுத்திருக்கலாம் என்றும் பயணிகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
ரயில்வே அதிகாரிகள் விளக்கம்: எனினும், இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், "பயணிகள், ஒரு லிட்டர் தண்ணீரை முழுவதுமாக குடிப்பது இல்லை. முழுவதும் ஏசி வசதி கொண்ட ரயில் என்பதால் வெப்ப காலத்திலும் பெரிய அளவில் தாக்கம் ஏற்படாது. பயணிகள் தண்ணீரை வீணாக்காமல் தடுக்கும் நோக்கத்திலேயே அரை லிட்டர் வாட்டர் பாட்டில் கொடுக்கும் முறை நடைமுறை கொண்டு வர இருப்பதாக கூறியுள்ளனர்".












Click it and Unblock the Notifications