இது லிஸ்ட்லயே இல்லையே.. 60 தொகுதியுடன்.. பாஜக வைக்கும் டிமாண்ட்.. ஆடிப்போன அதிமுக
சென்னை: அதிமுகவில் முதல்வர் பதவி விவகாரம் சுமூகமாக முடிந்த நிலையில், பாஜக மேலிடம் தமிழக சட்டசபை தேர்தலில் 60 தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவியை கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
வருகிற 17ம் தேதி அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சென்னை வந்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. பாமகவும் துணை முதல்வர் வேட்பாளர் பதவி கேட்க தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிமுக அதிர்ச்சி அடைந்துள்ளது.
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு 13 இடங்களை விட்டுக்கொடுத்தது. அதற்கு பதில் 21 சட்டசபை தொகுதிகளிலும் அதிமுகவே போட்டியிட்டது.
மீண்டும் தொடரும்
அதாவது லோக்சபா தேர்தலில் பாமகவுக்கு 7 தொகுதியும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் கொடுக்கப்பட்டது. பாஜவுக்கு 5 தொகுதிகளும், தேமுதிகவுக்கு 4 தொகுதிகளும், புதிய நீதிக்கட்சிக்கு ஒரு தொகுதியும் வழங்கப்பட்டது. இந்நிலையில், 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக மேலிடம் உத்தரவு
பாஜக அண்மை காலமாக பிரபலமான தலைவர்கள், திரைநட்சத்திரங்கள், அரசு அதிகாரிகளை தங்கள் பக்கம் சேர்ந்து கட்சியை பலப்படுத்தி வருகிறது. கடந்த காலங்களில் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற தொகுதிகளின் பட்டியலை தயார் செய்துள்ளது பாஜக. அத்துடன் வரும் சட்டமன்ற தேர்தலில் 60 தொகுதிகளையும், துணை முதல்வர் பதவியையும் கேட்டு பெற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாஜக போட்டியிட தயார் செய்துள்ள தொகுதிகளில் சுறுசுறுப்பாக பணிகளை மேற்கொள்ளுமாறு டெல்லி மேலிடம் உத்தரவிட்டுள்ளது..
எடப்பாடி சம்மதம்
இதன் காரணமாக, 60 தொகுதிகளை குறிவைத்து பாஜ தீவிரமாக வேலை செய்ய தொடங்கிவிட்டதாம். முதல்வர் வேட்பாளர் பிரச்சனை அண்மையில் சுமூகமாக முடிந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்துவிட்டு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒதுங்கிவிட்டார். அதற்கு ஈடாக கட்சியில் வழிகாட்டுக் குழுவை அமைக்க விரும்பினார். அதற்கு எடப்பாடி சம்மதித்ததால் பிரச்சனை சுமூகமாக முடிந்தது. இந்த விவகாரத்தில் பாஜக மேலிடம் தலையிட்டதால் தான் பிரச்சனை சமூகமாக முடிந்ததாகவும் கூறப்படுகிறது.
சென்னை வருகிறார்
இதையடுத்தே 60 தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் விவகாரத்தை பாஜக கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. தாங்கள் கேட்கும் தொகுதிகளை அதிமுக இந்த முறை தங்களுக்கு கொடுக்கும் என்ற நம்பிக்கையில் பாஜக உள்ளதாம். தமிழகத்திற்கு பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி வருகிற சனிக்கிழமை (17ம் தேதி) வருகிறார். கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த இவர் முன்னிலையில் தான் நடிகை குஷ்பு பாஜவில் சேர்ந்தார். தமிழகத்தின் தேர்தல் பொறுப்பாளராக ஓரிரு நாளில் இவர் அறிவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர் தமிழகம் வந்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் தேர்தல் பணிகளையும் அவர் முடுக்கிவிடுவார் என்றும் கூறப்படுகிறது.
பாஜகவும் டிமாண்ட்
இது ஒருபுறம் எனில், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாமக தோல்வியை தழுவியது. ஆனாலும் கணிசமான ஓட்டுக்களைப் பெற்றது. இதை வைத்துதான் லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் 7 இடங்களை கடந்த முறை பெற்றது. இந்நிலையில் தற்போது அதிமுக கூட்டணியில் நீடிப்பதற்கு துணை முதல்வர் கோரிக்கையை பாமகவும் கேட்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவிடம் பாஜக, பாமக இரு கட்சிகளும் இந்த முறை வலுவான டிமாண்ட்களை வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட சூழலில் இருகட்சிகளில் இருந்தும் வரும் துணை முதல்வர் டிமாண்ட் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.