64% பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது:பிரதமர் மோடி ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: தமிழகத்தில் 64% பேருக்கு கொரோனா தடுப்பூசி முழுமையாக போடப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
Recommended Video
நாட்டின் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் பங்கேற்றனர்.
இதில் பேசிய பிரதமர் மோடி, முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: ஓமிக்ரான் வைரஸ் அதிவேகமாக மக்களை பாதித்து வருகிறது. ஆகையால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். திருவிழா காலங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். வீடுகளில் தனிமைப்படுத்துதல் விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கொரோனாவை மக்கள் தோற்கடிப்பார்கள்; கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். கொரோனா பரவலைத் தடுக்க ஒரேவழி தடுப்பூசி மட்டுமே. தற்போதைய நிலையில் மாநிலங்களிடம் போதுமான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தேசிய தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். முன்களப் பணியாளர்களுக்கு கூடுதல் தடுப்பூசிகள் விரைவாகப் போடப்பட வேண்டும் என்றார்.
தஞ்சாவூரில் கழிவுநீர் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஜெயலலிதா கோவில் இடிப்பு
தடுப்பூசி போடுவது அதிகரிப்பு
இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கொரோனா தொற்று நோயின் ஓமிக்ரான் அலையை எதிர்கொள்ள தமிழகம் முழுமையாகத் தயார் நிலையில் உள்ளது. எனது அரசு பொறுப்பேற்ற பிறகு, தடுப்பூசி செலுத்துவது அதிகரித்துள்ளது.
64% பேருக்கு கொரோனா தடுப்பூசி
இன்று வரை, தகுதியுள்ளவர்களில் 64% பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 15 முதல் 18 வயது வரையிலான இளைஞர்களில் 74 சதவிகிதத்தினருக்கு தடுப்பூசி போட்டுள்ளது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கும் தற்போது நல்ல வரவேற்பு உள்ளது.
கொரோனா பரிசோதனைகள்
கொரோனா நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்திட, மாநில மற்றும் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகளை ஏற்படுத்தியுள்ளதோடு, தேவையான அனைத்து நகரங்களிலும் கொரோனா பராமரிப்பு மையங்களும் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் தேசிய அளவில் வரையறுக்கப்பட்ட சோதனை விதிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றப்படுகிறது. ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை மட்டுமே பயன்படுத்துப்படுகிறது. ஆர்.டி.பி.சி.ஆர். சோதனைகளின் எண்ணிக்கை, ஆக்சிஜன் உற்பத்தி திறன், ஆக்சிஜன் சேமிப்பு மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளும் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளன.
தயார் நிலையில் அரசு இயந்திரம்
கொரோனா பெருந்தொற்றினைக் கட்டுப்படுத்தத் தேவையான அனைத்து விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகளைக் கண்டிப்பாக அமல்படுத்துமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் நான் அறிவுறுத்தியுள்ளேன். நிலைமையைச் சமாளிக்க அனைத்து அரசு இயந்திரமும் முழுமையாக தயார் நிலையில் உள்ளது. இந்த கொரோனா அலையை எதிர்கொள்வதில் மத்திய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் தமிழ்நாடு துணை நிற்கும் என்று உறுதியளிக்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.