பகலில் பிரபல நிறுவன டீம் லீடர்.. இரவில் லாக்கர் உடைப்பவர்! சென்னையில் சம்பவம் செய்து சிக்கிய இளைஞர்
சென்னை: பகலில் டீம் லீடராக வேலை செய்துக்கொண்டே இரவில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
பெருங்களத்தூர் காந்தி ரோடு காமராஜர் பகுதியை சேர்ந்தவர் 25 வயதான விக்னேஷ். கல்லூரி படிப்பை முடித்த இவர் கடந்த சில மாதங்களாக சென்னை விமான நிலையத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ப்ளேஸ்டேஷனில் டீம் லீடராக பணியாற்றி வருகிறார். மதியம் 2 மணிக்கு வேலைக்கு சென்றால் ஏறத்தாழ இரவு 12 மணிக்குதான் வீடு திரும்புவார். அழகான வீடு, அன்பான குடும்பம், நிம்மதியான வேலை என்று இருந்த இவர் சில மாதங்களுக்கு முன்னர்தான் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

வீடு, வேலை, திருமண வாழ்க்கை என நாட்கள் அமைதியாக சென்றுக்கொண்டிருந்தது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் வீடு திரும்பவில்லை என்று குடும்பத்தினர் இரவு முழுக்க தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால் போலீஸ் ஸ்டேஷன் சென்றிருக்கின்றனர். அங்குதான் ஒரு ட்விஸ்ட் நடந்திருக்கிறது. அதாவது இவர்கள் தேடி போன விக்னேஷ் காவல் நிலையத்தில் விசாரணை கைதியாக அமர வைக்கப்பட்டிருக்கிறார். இதைக்கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்து போலீஸிடம் விசாரிக்கையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, விக்னேஷுக்கு அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தில் வழங்கும் சம்பளம் போதவில்லை. என்னதான் டீம் லீடராக இருந்தாலும் வருமானம் வயிற்றுக்கும், வண்டிக்குமே சரியாய் இருந்திருக்கிறது. எனவே தனது வருமானத்தை அதிகரிக்க விக்னேஷ் திட்டமிட்டார். இரவு 12 மணிக்கு வீடு திரும்பும்போதெல்லாம் இதே சிந்தனையோடுதான் இருந்திருக்கிறார். அப்போதுதான் சென்னை இரவின் அமைதி இவருக்கு புரிந்திருக்கிறது.
தெருக்கள் நிசப்தமாக இருந்திருக்கிறது. இந்த அமைதி இவரது சிந்தனையை குழப்பி குற்ற செயல்களில் ஈடுபட வைத்திருக்கிறது. இப்படியாக ஒவ்வொரு நாள் இரவும் அமைதியான தெருக்களின் வழியே வரும்போது யார் வீடு பூட்டி இருக்கிறது என்பதை நோட்டமிட்டுக்கொண்டே வந்திருக்கிறார். சரியாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவர் இப்படி நோட்டம் விட்டுக்கொண்டு வந்தபோது கட்டபொம்மன் சாலையில் உள்ள வீடு ஒன்று பூட்டி இருப்பதை பார்த்திருக்கிறார்.
அப்புறம் என்ன வீட்டின் பூட்டை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்துள்ளார். ஆனால் அந்த வீட்டில் லவ் பேர்ட்ஸ் இருந்திருக்கிறது. இவர் உள்ளே நுழைந்ததை உணர்ந்த அந்த பறவைகள் கூச்சலிட தொடங்கிவிட்டன. இது இப்படியே கத்திக்கொண்டிருந்தால் நாம் மாட்டிக்கொள்வோம் என்பதை உணர்ந்த விக்னேஷ் அந்த பறவைகளை கொன்றுவிட்டு வீட்டிலிருந்த பணத்தை கொள்ளையடித்துள்ளார். இந்த சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில், காவல்துறையினர் குற்றவாளி விக்னேஷ்தான் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வந்தனர்.
இந்த நிலையில் மற்றொரு சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது. சென்னை தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர் வ.உ.சி தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலிலிருந்து விடியற்காலை 3 மணிக்கு திடீரென சத்தம் கேட்டிருக்கிறது. என்ன சத்தம் இந்த நேரம் என எட்டி பார்த்த பக்கத்து வீட்டுக்காரர், கோயிலின் பூட்டை யாரோ உடைத்துக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். எனவே உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுக்க, அவர்கள் மெல்ல பதுங்கி சென்று விக்னேஷை பிடித்துவிட்டனர்.
அவரிடம் விசாரித்ததில் ஏற்கெனவே இந்த கோயிலில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. எனவே மீண்டும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட முயன்றபோது கையும் களவுமாக விக்னேஷ் மாட்டிக்கொண்டார். இவரிடம் மேலும் விசாரித்ததில், கட்டபொம்மன் சாலையில் உள்ள வீடு ஒன்றில் லவ் பேர்ட்ஸை கொன்று திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
காலையில் ஜெனியூனாக டீம் லீடர் வேலையை பார்த்துக்கொண்டு இரவில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பெருங்களத்தூரில் பேசு பொருளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications