தமிழகத்தில் மானியம், இலவச மின்சாரம் பெறுபவரா.. மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம்
சென்னை: தமிழகத்தில் இலவச மின்சாரம், மானிய மின்சாரம் பெறும் நுகர்வோர்கள் தங்களின் ஆதார் எண்ணை மின் நுகர்வோர் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மின் முறைகேட்டை தடுக்க ஆதார் எண் இணைக்கும் பணி துவங்கியுள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து வங்கி கணக்குகள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அரசிடம் இருந்து மானியம் பெரும் அனைத்து மின் நுகர்வோர்களுக்கு தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆதார் எண் இணைப்பதன் மூலம் மானிய மின்சாரம் முறைகேடாக செல்வதை தடுக்க முடியும். அதேபோல் மின் நுகர்வோர் விவரமும் நம்மிடம் இருக்கும் கடந்த ஆட்சியில் ஒரு கோடியே 15 லட்சம் தொலைபேசி எண்கள் மட்டுமே நுகர்வோரிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. தற்போது மூன்று கோடி நுகர்வோர்களின் எண் நம்மிடம் உள்ளது விரைவில் ஆதார் எண் இணைப்பதன் மூலம் மின் இழப்பீட்டை தடுக்க முடியும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

இலவச மின்சாரம் வேண்டாம் என எழுதி தரலாம்
மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆய தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூலை 18ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், மாதம் 301 - 400 வரை பயன்படுத்துவோருக்கு மாதம் 147.50 ரூபாய் உயர்த்தவும் 500 யூனிட்டுக்குமேல் பயன்படுத்துவர்களுக்கு 298.50 ரூபாய் கூடுதல் மின் கட்டணமாகவும், மேலும், கேஸ் இணைப்பைப்போல, 100 யூனிட் இலவச மின்சாரத்தை நுகர்வோர் வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் புதிய திட்டமும் அறிமுகப்படுத்த உள்ளதாக கூறினார்.

ஒரு வீட்டுக்கு ஒரு மின் இணைப்பு
ஒரு வீட்டுக்கு ஒரு மின் இணைப்பு எனக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டுத்தலங்கள் முதலியவற்றின் மின் கட்டணப் பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் மின் தொடர்பு கழகத்திற்கு 43,493 கோடியாக இருந்த கடன் தொகையானது கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்து தற்போது வரை 1,59,823 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

வேறு வழியில்லை
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் உதய் திட்டத்தில் இணைந்தாலும் தொடர்ந்து இழப்பையே சந்தித்துள்ளது. இதன் மூலம் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை எனக் குறிப்பிட்டவர். "தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கடன் சுமையைக் குறைக்க மின் கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை எனவும் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு அரசாணை
இந்த நிலையில் மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 100 யூனிட் இலவச மின்சாரம் பெறும் அனைவரும் தங்களின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யரெல்லாம் இணைக்கலாம்
முதல் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக பெரும் வீட்டு நுகர்வோர், குடிசை நுகர்வோர், பொது வழிபாட்டுத்தலங்கள், விவசாய பயன்பாடு மின் இணைப்புகள், விசைத்தறி, கைத்தறி நுகர்வோர்கள் என மானியம் பெரும் நுகர்வோர்கள் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

யார் இணைக்கத் தேவையில்லை
இதனால் நுகர்வோர் அச்சப்பட தேவையில்லை எனவும், ஒரே வளாகத்தில் அதிக இணைப்புகள் வைத்திருப்பது, வாடகை தாரர்களிடன் அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படுவது தடுக்கப்படும் என்றும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தொழிற்சாலைகள், கடைகள், நிறுவனங்கள் போன்ற மானியம் பெறாத நுகர்வோர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தேவையில்லை என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications