சட்ட பிரிவுகளை மாற்றியது ஏன்? நீதிபதி கேள்வி! சிறுநீர் கழித்த வழக்கில் டாக்டர் சுப்பையாவிற்கு ஜாமீன்
சென்னை: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மருத்துவர் சுப்பையாவுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
சென்னை அரும்பாக்கத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் முதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்ததாக சுப்பையா மீது வழக்கு பதியப்பட்டது. அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
சென்னை ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவர் தான் இந்த சண்முகம் சுப்பையா என்று தெரியவந்ததும், இந்த விவகாரம் தேசிய செய்தியானது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபியின் தேசிய தலைவராக அப்போது பதவியில் இருந்தார் சுப்பையா.
சிறுநீர் கழித்த சுப்பையா கைது.. புகாரளித்தவருக்கு அடுத்தடுத்து மிரட்டல்.. பாதுகாப்பு கோரும் பாலாஜி.!
நடந்தது என்ன?
ஆதம்பாக்கத்தில் வசித்து வரும் இவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணி செய்து வருகிறார். இதற்கு முன் புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவில் தலைவர் பதவியையும் வகித்து இருக்கிறார். ஆதம்பாக்கத்தில் தனது அப்பார்ட்மெண்டில் பார்க்கிங் பிரச்சனை காரணமாக, 2020ல் பக்கத்து வீட்டு மூதாட்டி வீட்டு வாசலில் இவர் சுறுநீர் கழித்தார். அதோடு அவர்கள் வீட்டு வாசலில் பயன்படுத்தப்பட்ட மாஸ்க்கை தூக்கி எறிந்து தொந்தரவு கொடுத்தார்.
சுப்பையா கைது
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்துக்கு, சுப்பையாவை போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர். பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் பொது சொத்துக்களை சேதபடுத்திய வழக்கில் கடந்த 19ம் தேதி மருத்துவர் சுப்பையா கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டார்.
ஜாமின்
இந்த நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி மருத்துவர் சுப்பையா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்து கொள்ளபட்டது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மருத்துவர் சுப்பையாவிற்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.
நீதிமன்றம்
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, 'இந்த வழக்கில் 2 ஆண்டுகளாக எந்தவிதமான முன்னேற்றம் இல்லாதபோது சட்ட பிரிவுகளை மாற்றியமைத்து மீண்டும் வழக்கு பதிய என்ன காரணம்' என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் மருத்துவர் சுப்பையாவிற்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி வழக்கு தொடர்பாக தமிழக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 24ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.